புதுச்சேரி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் புதுச்சேரியில் அவர் கூறியதாவது: புதுச்சேரியில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு முக்கியமாக பெண்களே 60 வாக்குச்சாவடிகளில் பணிபுரிவர். இம்முறை வாக்குச்சாவடியினுள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் வண்ண நிழற்படம் இடம்பெறும். பெயர் பெரிதாக இருக்கும். வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்கும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை இதுவரை 81 முதல் 82% வாக்குப் பதிவு நடந்துள்ளது. வரும் தேர்தலில் இன்னும் அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே வேட்பாளர்களாக களம் இறங்கும் பலர் இலவசங்களை அளித்து வருவது குறித்துக் கேட்கிறீர்கள். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் தேதி அறிவித்தப் பிறகுதான் இலவசங்கள் அளிப்பது மற்றும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போன்றவற்றையெல்லாம் கண்காணிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
அசாம் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் நேரிடையாகச் சென்று ஆலோசனை நடத்தியது. புதுச்சேரியில் இப்போது ஆலோசனை செய்துள்ளோம். தொடர்ந்து 2 நாள் தமிழ்நாட்டில் ஆலோசனை செய்ய உள்ளோம். பின்னர் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியப் பிறகு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றார்.
