×

எங்கள் தொகுதியை எங்களுக்கே கொடு… நயினாருக்கு எதிராக நெல்லையில் சைவ வேளாளர் சங்கம் திடீர் போர்கொடி

 

நெல்லை மாவட்டத்தில் பாரம்பரியம் மிக்க தொகுதிகளில் ஒன்றாக நெல்லை சட்டசபை தொகுதி உள்ளது. இத்தொகுதியில் ஜி.ஆர்.எட்மண்ட், நாவலர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வெற்றி பெற்று அமைச்சர்களாக உலா வந்துள்ளனர். 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.எல்.எஸ்.லட்சுமணன் வெறும் 601 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற சைவ வேளாளர்களின் ஓட்டுக்கள் முக்கிய காரணமாக இருந்தது. மறுசீரமைக்கப்பட்ட நெல்லை தொகுதியை பொறுத்தவரை தேவேந்திர குல வேளாளர்களுக்கு அடுத்தபடியாக பிள்ளைமார்கள் சமூகத்தின் ஓட்டுகளும் உள்ளன. இத்தொகுதியை திமுக பெரும்பாலும் பிள்ளைமார் சமூகத்திற்கே ஒதுக்கி வரும் நிலையில், அதிமுக – பாஜ கூட்டணியில் கடந்த 2001 தொடங்கி, தொடர்ந்து மாற்று சமூகத்தினருக்கே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லையில் தற்போது சைவ வேளாளர் சங்கத்தினர், ‘எங்கள் தொகுதியை எங்களுக்கே கொடு’ என்கிற கோஷத்தை எழுப்பி
வருகின்றனர்.

நெல்லை சந்திப்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பில் நெல்லை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒருசிலர் ‘எங்கள் தொகுதியை எங்களுக்கே கொடு’ என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அதிமுக சார்பில் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வரும் நிலையில், கடந்த முறையும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜ சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இம்முறையாவது தொகுதியை மீட்போம் என்கிற கோஷத்தோடு சைவ வேளாளர் சங்கத்தினர் களம் இறங்கியுள்ளனர். இதனால் நெல்லை தொகுதியின் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

 

Tags : Saiva Vellalar Sangam ,Nellai ,Nainar ,Nellai Assembly ,G.R. Edmond ,Navalar Nedunchezhiyan ,R.M. Veerappan ,Nainar Nagendran ,A.L.S. Lakshmanan ,DMK ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற...