சென்னை: தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சி பிரச்னையும் இருக்க கூடாது. யாராவது தேவையின்றி கட்சிக்குள் குழப்பம், பிரச்னையை உண்டாக்கி அது என் காதுகளுக்கு வந்தால் அவர் எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை பாயும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இந்த தேர்தலில் மக்களுக்கு பிடித்தவர்களுக்குதான் சீட் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 23க்கு இன்னமும் 39 நாட்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் பணியில் நம் கழகம் தான் நம்பர் 1 ஆக இருந்து வருகிறது.
தேர்தல் களம் என்று வந்துவிட்டால் திமுகக்காரர்கள் சுழன்று சுழன்று பணியாற்றுவார்கள் என்று பத்திரிகையாளர்களும் எதிரிகளுமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் களத்தில் நமது கையே ஓங்கி இருக்கிறது. அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 3000 ரூபாய் வழங்கியது. 1.31 கோடி குடும்பங்களுக்கு மகளிர் உரிமை தொகையாக 5000 ரூபாய் அளித்தது. முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சுமார் 40 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கியது உள்ளிட்ட நலத்திட்டங்களால் பொது மக்கள் மத்தியில் நமக்கான ஆதரவு பெருமளவு கூடியுள்ளது.
அதேபோல கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க நினைத்தவர்களின் சதியை முறியடித்து, புதிய கட்சிகளை அரவணைத்து மிக பலமான கூட்டணியைக் கட்டியிருக்கிறோம். கூட்டணி வலிமை, நலத்திட்டங்கள், ஐந்தாண்டு சாதனைகள் உள்ளிட்டவைகளால் நாம் தான் வெல்வோம் என்ற எண்ணத்தை பொதுமக்களிடம் மட்டுமின்றி, எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம். களம் எல்லாவகையிலும் நமக்கு பாசிடிவ்வாக இருக்கிறது. எந்த வகையிலும் சிறு சறுக்கல் கூட இனி வந்து விடக் கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் அதில் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களது ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு அசைவும், பேச்சும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். ஓரணியில் தமிழ்நாடு, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி, வெல்லும் தமிழ்ப் பெண்கள், தமிழ்நாடு தலைகுனியாது என வரிசையாக தேர்தல் பணிகளை ஓய்வின்றி மேற்கொண்டிருந்தோம். அது மட்டுமின்றி வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடுகள், இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிரணி மாநாடுகள். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக தீரர்கள் கோட்டமாம் திருச்சியிலே லட்சக்கணக்கான திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டினையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். நாம் நடத்திய அத்தனை பரப்புரை, மாநாடுகளை வெற்றி பரப்புரையாக, மாநாடாக மாற்றிய பெருமை உங்களையே சாரும்.
கடந்த ஓராண்டு காலமாக உழைத்த உழைப்பை அறுவடை செய்யும் காலம் இது. இனி வரும் நாட்கள் ரிலே ஓட்டப்பந்தயத்தில் வெற்றிக் கோட்டை அடைவதற்கு ஓடுவது போலத்தான். நம்மில் ஒருவர் கூட சுணங்கிவிடக் கூடாது. இதுவரை போட்ட உழைப்பை விட இரண்டு மடங்கு உழைப்பை அளித்து, திமுகவின் வெற்றியை அறுவடைசெய்ய வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவரின் தோளிலும் உள்ளது. என் உத்தரவுக்கும் வழிகாட்டுதலுக்கும் கட்டுப்பட்டு களத்தில் ஓயாமல் உழைத்து வரும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பையும் மதிக்கிறேன். அத்தனை உழைப்பிற்கும் அதற்குண்டான பலன் அவரவரை வந்து சேரும். வெற்றியை நெருங்கி உள்ளோம். இந்த நேரத்தில் தான் நாம் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். திமுக வென்றது என்ற செய்தி நம் காதில் எட்டும் வரை களத்தில் நின்று உழைக்க வேண்டும்.
தேர்தலில் நாம் போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 200 தொகுதிகள் வெல்வது இலக்கு என்பதை எண்ணி பணியாற்றுங்கள். தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சி பிரச்னையும் இருக்க கூடாது, தனிப்பட்ட மனஸ்தாபங்கள் கட்சியின் வெற்றியை பாதிப்பதை எப்போதும் அனுமதிக்கமுடியாது. யாராவது தேவையின்றி கட்சிக்குள் குழப்பமோ, பிரச்னையோ உண்டாக்கி அது என் காதுகளுக்கு வந்தால் அவர் எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை பாயும் என எச்சரிக்கிறேன். இதை ஒவ்வொரு நிர்வாகிக்கும் சொல்லிவிடுங்கள். தனிப்பட்ட நிர்வாகிகளைவிட எனக்கு கட்சியின் நலன் தான் முக்கியம். தேர்தல் நடக்கும் காலகட்டத்திலேயே நடவடிக்கை பாயும் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.
அதேபோல மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் திமுகவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று தான் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதே தவிர வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பவர்கள் அல்ல என்பதையும் மனதில் வைதுக்கொள்ளுங்கள். வேட்பாளர் தேர்வு, யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். அவரை பிடித்தால் சீட் கிடைக்கும், இவரை பிடித்தால் சீட் கிடைக்கும் என நேரத்தையும் உழைப்பையும் யாரும் வீணாக்க வேண்டாம் “மக்களுக்கு பிடித்தவர்களுக்கு “ மட்டுமே இம்முறை சீட். வெற்றிவாய்ப்புள்ள உறுதியாய் வெற்றி பெறும் ஆற்றல் உள்ளவர்களுக்கு மட்டுமே சீட். எனக்கு ஒரே பணி தான் அது அரசியல் பணி. 24 மணிநேரமும் அரசியல் அரசியல் அரசியல் அதுதான் என் வாழ்க்கை. உங்க அத்தனை பேரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அதேபோல கட்சியின் அத்தனை நிர்வாகிகள் பற்றிய அப்டேட் என் டேபிளுக்கு வந்திட்டே இருக்கும்.
போன மாசம் வரைக்கும் உடன்பிறப்பே வா நிகழ்ச்சி மூலம் கூட திமுக நிர்வாகிகள் அத்தனை பேரையும் நேரில் சந்தித்திருக்கிறேன். ஆகவே எனக்கு யாரையும் அறிமுகப்படுத்த வேண்டியது இல்லை. அனைவருமே நான் அறிந்தவர்கள் தான். 234 தொகுதிகளிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர். புதிய வாக்காளர் பட்டியலின்படி உள்ள வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப பிஎல்ஏ2, பிஎல்சி, பிடிஏக்களை மாற்றியமைத்து வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் விடுபட்டுள்ளனரா என்பதை உறுதி செய்திட வேண்டும். இப்பணியானது வழக்கறிஞர் அணி மூலம் தலைமைக்கழகத்தால் கண்காணிக்கப்படும். தான் மட்டுமின்றி, பிறரையும் வெற்றி பெற வைத்து திமுகவின் மாபெரும் வெற்றிக்கு உழைப்பவர்களுக்கு உண்டான பரிசு தேர்தலுக்கு பிறகு தேடி வரும். களம் நம் வெற்றிக்காக கைகூடி நிற்கிறது. வென்று வர தயாராகுங்கள். உழையுங்கள் உழையுங்கள். ஒன்று சேர்ந்து உழைப்போம். வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அவர் பேசினார்.
* யாருக்கு அமைச்சர் பதவி
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டுல 234 தொகுதி இருக்கு. இதில் நம்ம தொகுதியில நடப்பது தலைவருக்கு தெரியவா போகுது என்ற நினைப்பில இருக்க வேண்டாம். இந்த ஸ்டாலினுக்கு இரண்டு கண்கள் மட்டுமில்ல. 234 தொகுதிகளிலும் கண்ணும் காதும் இருக்கு. அத்தனை தகவலும் எனக்கு தனிப்பட்ட முறையில வந்திடும். இப்பவும் வந்திட்டு தான் இருக்கு. உங்கள் பொறுப்பில் இருக்கும் அத்தனை தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே நீங்கள் வென்றதற்கு சமம். அடுத்த முறை அமையவுள்ள நமது ஆட்சியில் சீனியாரிட்டி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். அமைச்சர் பதவி என்பது அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே என்பதை அழுத்தம் திருத்தமாக இப்பொழுதே மனதில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.
