சென்னை: தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுவதை வரவேற்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் பல்கலைகழகம் உருவாக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் 2025 அக்டோபர் 17ம் தேதி சட்டமன்ற பேரவையில் சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கு அறிமுக நிலையிலேயே எதிர்ப்பும், ஆட்சேபணையும், அவசரப்பட்டு நிறைவேற்ற கூடாது என கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. இருப்பினும் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கல்வியாளர்கள், ஆய்வறிஞர்கள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
உயர்கல்வி வழங்கும் கடமை பொறுப்பில் இருந்து அரசை விலக்கி விடும் ஆபத்தானது என்று சுட்டி காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு பரிசீலனைக்கு அனுப்பி வைத்து, தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று கருத்துக்களையும், விமர்சனங்களையும் உள்வாங்கி திருத்தி கொள்ளும் அரசின் ஜனநாயக நடைமுறையை வரவேற்கிறது.
