கூடலூர், பிப்.21: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மூலம் விளையாட்டு உபகரணங்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்களிடம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி மன்றத்தில் நடைபெற்றது.
தேவர் சோலை பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப் குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வள்ளி தலைமை வகித்து விளையாட்டு உபகரணங்களை அந்தந்த வார்டு உறுப்பினர்களிடம் வழங்கினார். இவ்விழாவில் தலைமை எழுத்தர் மாதவன் வரவேற்று பேசினார். மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி துணை தலைவர் யூனுஸ் பாபு நன்றி கூறினார்.
