சென்னை: சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைக் ரேஸ், வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதாக 4 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்ட வழக்கில், போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளை கையாள மாதிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
அப்போது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பைக் ரேசில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருவதாகவும், ஏற்கனவே பைக் ரேசில் ஈடுபட்டு பழைய குற்றவாளிகளின் விவரங்களை காவல்துறை பராமரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 107 பேர் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அறிவியல் பூர்வ ஆய்வு ஒன்றில் கடந்த 2022-ல் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 லட்சத்து 43 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளை கையாளுவதற்கு காவல்துறை ஒரு மாதிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
