×

திருவண்ணாமலை அருகே பராமரிக்க யாருமின்றி தவித்த 90 வயது முதியவர் மனைவியுடன் தற்கொலை 5 மகள்களை பெற்றும் இறுதியில் துயரம்

திருவண்ணாமலை, பிப்.3: வயதான நிலையில் பராமரிக்க யாருமின்றி பரிதவித்த முதிர் வயது தம்பதியர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். திருவண்ணாமலை அடுத்த சானானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி(90). அவரது மனைவி காயாம்பாள்(80). இவர்களுக்கு 5 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. எனவே, முதியவர் கந்தசாமியும், அவரது மனைவியும் தனியே வசித்து வந்தனர். வயது முதிர்ந்த நிலையில், இருவரும் தனித்து வாழ முடியாத நிலையிலும், முதியோர் உதவித்தொகையை கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, முதியவர் கந்தசாமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரை கவனித்து வந்த மனைவி காயாம்பாளுக்கும் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, இருவரும் தங்களை பராமரிக்க யாருமின்றி பரிதவித்தனர்.
இதனால் விரக்தியடைந்த கந்தசாமியும், அவரது மனைவியும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து, நெற்பயிருக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து நேற்று அதிகாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று மதியம் வரை அவர்களுடைய வீடு திறக்காமல் இருந்ததை கண்டு, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே, வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது, முதியவர்கள் இருவரும் விஷம் குடித்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மங்கலம் போலீசார் விரைந்து சென்று, முதியவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, இறந்த தம்பதியின் மகள் சரோஜா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Suicide ,anyone ,Thiruvannamalai Tragedy ,daughters ,end ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை