×

திமிரி அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

கலவை : திமிரி அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திமிரி ஒன்றியம் காவனூர் கிராமத்திலிருந்து மாங்கான்குடிசை செல்லும் சாலையில் தினசரி ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் சென்று வருகின்றனர். மேலும், 500க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.

இந்த சாலை வழியாக கத்தியவாடி, கீழ்குப்பம், ராமாபுரம், கவரப்பாளையம், ஆயிலம், ஆயிலம்புதூர், அருங்குன்றம், மாங்கான்குடிசை, சாமந்திபுரம், போன்ற கிராமங்களுக்கு போக்குவரத்து இணைப்பு சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இணைப்பு சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால், அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமமடைகின்றனர். மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகள், சாலையில் பெயர்ந்து உள்ள ஜல்லி கற்கலால், கீழே விழுந்து காயமடைகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குண்டும் குழியுமாக உள்ள சாலையை, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ள சாலையை விரைவில் சீரமைத்து, தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Timiri ,JALLEY STONE ,Timiri Union Kavanaugh village ,Mangankudisai ,
× RELATED திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக...