நெல்லை, பிப். 3: தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லை கிழக்கு, மத்திய மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நெல்லை கிழக்கு ஆவுடையப்பன், மத்திய மாவட்டம் அப்துல்வகாப் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை: நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பேரூர் பகுதியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி பிப்.6ம் தேதி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு 5ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நெல்லை மாவட்டத்திற்கு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லை கிழக்கு, மத்திய மாவட்ட திமுக சார்பில் நெல்லை வி.எம்.சத்திரம் பைபாஸ் பாலம் அருகே உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட, மாநில சார்பு அணிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.