×

45-50 வயது பெண்களின் சமூக நலம்

நன்றி குங்குமம் டாக்டர்

செவ்விது செவ்விது பெண்மை!

இந்த வயதுப் பெண்களின் சமூக நலம் தொடர்பான விஷயத்தை ஓர் உரையாடல் வடிவில் எழுதியிருக்கிறேன். 45-50 வயது பெண்களின் சமூக நலம் என்பது, தியாகத்தின் முடிவு அல்ல – தன்னறிவின் தொடக்கம். பெண்கள் தங்களை சமூகத்தில் மறுபடியும் காணும் வயது இது என்பதையே நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

அம்மா – மகள் உரையாடல்
மகள்:
அம்மா, இப்போ நீ ரொம்ப சும்மாவே இருக்கிற மாதிரி தெரியல. வீட்டில இருக்கறதும், வேலைக்கு போறதும், எல்லாருக்காகவே ஓடிக்கிட்டே இருக்க மாறி இருக்கு ஆனா உன் வாழ்க்கை இப்போ எங்க போச்சு ?

அம்மா (சிறு சிரிப்புடன்)
அப்படித்தான் கண்ணு… இந்த வயசுல பெண்களோட வாழ்க்கை இப்படித்தான். குழந்தைகள் வளர்ந்துட்டாங்க, கணவரோட வேலை, வீட்டுக் கவலை, வயசான பெற்றோர் – எல்லாத்துக்கும் நடுவுல நாம நாமே காணாம போயிடுறோம்.

மகள்:
அதுதான் எனக்கு புரியல அம்மா. 45-50 வயசு வந்ததும் பெண்களோட சமூக வாழ்க்கை ஏன் இவ்வளவு சுருங்கிடுது?

அம்மா

சமூகம் நம்மிடம் எதிர்பார்ப்பது மாறாது கண்ணு.“நல்ல அம்மா”, “பொறுப்பான மனைவி”, “அடக்கமான பெண்” இந்த அடையாளங்களுக்குள்ளேயே நம்மை அடக்கிவிடுவாங்க. நமக்கு தனி அடையாளம் இருக்கக் கூடாதுன்னு யாரும் சொல்லாமலேயே சொல்லிடுற மாதிரி.

மகள்:
அப்போ உன் நண்பர்கள்? உன் ஆசைகள்?

அம்மா
அவை எல்லாம் மெதுவா பின்னுக்குப் போயிடும்.

ஒரு காலத்துல இருந்த தோழிகள் –
“குழந்தை படிப்பு”, “மருமகள் பிரச்னை”, “உடல் வலி”
இந்த விஷயங்களுக்குள்ளேயே உரையாடல் சிக்கிக்கிடக்கும்.

சில பெண்கள் இப்படி சமூக உறவுகளிலிருந்து மெல்ல விலக ஆரம்பிப்பாங்க.

மகள்:
அது தனிமையா மாறிடுமா அம்மா?

அம்மா (மெதுவாக)
ஆமாம் கண்ணு.
வீட்ல நிறைய பேர் இருக்குற மாதிரி தெரியும்.
ஆனா மனசுக்குள்ள ஒரு வெறுமை.
“என்னை யாராவது புரிஞ்சுக் குறாங்களா?”
“நான் யாருக்காக வாழுறேன்?”
அப்படின்னு கேள்விகள் வர ஆரம்பிக்கும்.

மகள்:
இதுக்கெல்லாம் காரணம் சமூகம் தானா?

அம்மா
சமூகம் மட்டுமில்லை.
பெண்களும் தான்.
நாமே நம்ம தேவைகளை முக்கியமில்லாததுன்னு நினைச்சு ஒதுக்கிடுறோம்.
“இந்த வயசுல இதெல்லாம் தேவையா?”
“மகளுக்காக விட்டுக்கொடுக்கணும்”
“கணவர் மனசு புண்படக்கூடாது”
அப்படின்னு நம்ம சமூக வாழ்க்கையை சுருக்கிக்கிறோம்.

மகள்:
அம்மா, சமூக நலம் அப்படின்னா என்ன?

அம்மா
சமூக நலம் அப்படின்னா,
மற்றவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளும் திறன்,
உறவுகளில் சமநிலை,
நம்ம கருத்துக்களை வெளிப்
படுத்தும் உரிமை,
நம்ம அடையாளத்தை
பாதுகாக்கும் தைரியம் –
இவை எல்லாம் சேர்ந்ததுதான் சமூக நலம்.

மகள்:
அப்போ 45-50 வயசுல சமூக நலத்தை காப்பாத்த என்ன பண்ணலாம்?

அம்மா
(தன்னம்பிக்கையுடன்):
முடியும் கண்ணு. கண்டிப்பா முடியும்.

*நமக்குன்னு ஒரு வட்டம் இருக்கணும் – நண்பர்கள், சக பணியாளர்கள், ஒரே மனசுள்ள பெண்கள்.
*“இல்ல”ன்னு (No) சொல்லக் கற்றுக்கணும். எல்லா பொறுப்பையும் ஒருத்தரே சுமக்கணும்னு அவசியமில்லை.
*நம்ம திறமைகளை மீண்டும் கண்டுபிடிக்கணும் – எழுதுதல், பாடல், சமூக சேவை, தொழில்.
*மற்றவர்களோட ஒப்பீடு இல்லாத வாழ்க்கை வாழ கற்றுக்கணும்.

மகள்:
அம்மா, நீ இப்போ இந்த விஷயங்களெல்லாம் பேசுறது எனக்கு ரொம்ப சந்தோஷம். நீ உன்னோட சமூக வாழ்க்கையை திரும்ப உருவாக்கணும்.

அம்மா (மகளின் கையை பிடித்து):

உன்ன மாதிரி புரிதலோட ஒரு மகள் இருந்தாலே போதும் கண்ணு.
இந்த வயசுல பெண்கள் முடிவடையறது இல்ல.
மீண்டும் ஆரம்பிக்கற ஒரு புதிய
அத்தியாயம்தான்.

மகள்:
அப்படித்தான் அம்மா.
45-50 வயசு பெண்களுக்கான “இரண்டாவது வசந்தம்” இது.

அம்மா (சிரிப்புடன்):
ஆமாம் கண்ணு…
இந்த முறை நமக்காக வாழற வசந்தம்.

மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி

Tags : Kungumam ,Sevvidhu Sevvidhu ,
× RELATED மஞ்சள் மகிமை!