- கோயம்புத்தூர்
- தமிழ்நாடு ஊட்டச்சத்து அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு
- கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகம்
கோவை, பிப். 5: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500, சமையலர் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடிக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும். தற்காலிக பணி நீக்க காலத்தில் பிழைப்பு ஊதியம் வழங்க வேண்டும். மேலும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி, தேசிய மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் மகப்பேறு விடுப்பு 12 மாதம், மாதவிடாய் கால விடுப்பு தற்செயல் விடுப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 700 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். இவர்களில் சிலர் மயக்கம் அடைந்த நிலையில் அவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
