பல்லாவரம்: ஆவடியை சேர்ந்தவர் ஆகாஷ் (22), விஷூவல் கம்யூனிகேஷன் பட்டதாரி. இவர் தனது கல்லூரி நண்பர்களான பள்ளிப்பட்டு தினேஷ்குமார் (23), கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த நிரஞ்சன் (23) மற்றும் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த செல்வக்குமார் (23) ஆகியோருடன் நேற்று மாலை பல்லாவரம் வந்தார். பின்னர், திரிசூலம் மலையின் இயற்கை அழகை காண மலை உச்சிக்கு சென்றனர். அங்குள்ள கல்குவாரி குட்டைஅருகில் நின்று செல்பி எடுத்தபோது எதிர்பாராதவிதமாக ஆகாஷ், தினேஷ்குமார் ஆகியோர் கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து தத்தளித்தனர். சக நண்பர்கள் இருவரும், இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் நண்பர்கள் இருவரும் நீரில் மூழ்கினர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் வெகுநேரம் தேடியும் கிடைக்கவில்லை. அதற்குள் இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டு, நாளை தொடர உள்ளது.