×

பின்னலாடை இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ஜவுளி நிறுவனங்களுக்கு 20% மூலதன முதலீட்டு மானியம்; ஆண்டு தோறும் ரூ.30 கோடி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஜவுளி நிறுவனங்கள் பின்னலாடை இயந்திரங்கள் கொள்முதல் செய்ய 20% மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கோயம்புத்தூர் மாநகரின் கொடீசியா வளாகத்தில், தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் “முதலாவது சர்வதேச ஜவுளித் தொழில் மாநாடு 360”-ல், ஆற்றிய உரை:
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. அதுவும், தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு என்னவென்றால் இங்கு சமூகநீதியும் காப்பாற்றப்படுகிறது; அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியையும் சாதித்து காட்டிக்கொண்டு இருக்கிறோம். அதனால்தான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ஆட்டோமொபைல், ஐ.டி., காலணி உற்பத்தி, மின்னணுப் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது. அதுவும், ஜவுளித்துறையை பொறுத்தவரையில், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக, ‘இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்’ என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கிறது.

இந்தியாவின் ஜவுளி வணிகத்தில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 33 விழுக்காடு. நேரடியாக, 31 லட்சம் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டின் ஜவுளித்துறை வேலைவாய்ப்பு வழங்குகிறது. இதில், 60.12 விழுக்காடு பெண் தொழிலாளர்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம். இந்த மாநாடு மூலமாக தமிழ்நாட்டில் ஜவுளித் துறையின் வலுவான கட்டமைப்பு பற்றி உலக வாடிக்கையாளர்களுக்கு சென்று சேர வேண்டும். சர்வதேச முதலீடுகளை ஈர்க்க வேண்டும். அமெரிக்கா விதித்திருக்கும் 50 விழுக்காடு வரியால் பெரிய அளவில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் இருந்து மீண்டு, புதிய சந்தைகளை கண்டறிவது, வாங்குவோர் – விற்போர் சந்திப்பு நடத்துவது, பருத்திக்கான 11 விழுக்காடு இறக்குமதி வரியை நீக்குவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்துவது போன்ற பல முயற்சிகளை நாம் செய்து வருகிறோம்.

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாடு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஜவுளித் தொழிலுக்கான கண்காட்சி, ஃபேஷன் ஷோ, வாங்குவோர் – விற்போர் சந்திப்பு, கருத்தரங்குகள், விருதுநகரில் அமையவுள்ள பிஎம்-மித்ரா ஜவுளிப் பூங்கா தொடர்பான ‘ரோடு-ஷோ’ ஆகியவை நடைபெற இருக்கிறது. அண்மையில், கோவை, மதுரை, தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக, ஜவுளித்தொழிலுக்கு மட்டும் 9 ஆயிரத்து 764 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு இருக்கிறோம். இந்த மாநாட்டிலும், 915 கோடி ரூபாய் மதிப்பிலான 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் ‘ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை 2025-2026’-யும் இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கிறது. பல்வேறு வேலை பளு காரணமாக நேரில் வந்து உங்களை சந்திக்க முடியவில்லையென்றாலும், உங்களுக்கான ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜவுளி நிறுவனங்களுக்கு, அதிநவீன நெசவு மற்றும் பின்னலாடை இயந்திரங்களை கொள்முதல் செய்ய 20 விழுக்காடு மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும். இதற்காக, ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதேநேரத்தில், இந்த மாநாட்டில் கூடியிருக்கும் இந்தியா மற்றும், வெளிநாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்க விரும்புகிறேன். மிகச்சிறந்த உட்கட்டமைப்பைக் கொண்ட தமிழ்நாட்டில் முதலீடு செய்து, நீங்களும் வளர்ந்து, தமிழ்நாட்டிற்கும் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் திராவிட மாடலின் பெருங்கனவில், ஜவுளித் தொழில் கணிசமான பங்கு வகிக்க வேண்டும். இந்த மாநாட்டின் வெற்றி அதற்கு பெரிதும் உதவும் என்று தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Principal ,M.U. K. Stalin ,Coimbatore Municipal ,Codiesia Campus ,Tamil Nadu Government ,
× RELATED ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேரை...