குன்னம், ஜன.24: குன்னம் அருகே அகரம்சீகூரில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் ஜெயங்கொண்டம் சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடைக்கு அருகில் ஊராட்சி மன்ற அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம் அரசு கால்நடை மருத்துவமனை பகுதி நேர நியாய விலை கடை ஆகியவை உள்ளன மேலும் இரண்டு கல்யாண மண்டபங்கள் இந்த பகுதியில் உள்ளன.
எனவே இந்த பகுதிக்கு பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வந்து செல்கின்றனர். மதியம் 12 மணிக்கு மதுபான கடை திறப்பதால் மது பிரியர்கள் ரோட்டின் அருகிலேயே மது அருந்தி சாலையின் ஓரங்களில் மது பாட்டில்களை போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் பல்வேறு அவதிக்கு ஆளாகி விடுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து அகரம்சீகூர் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
