×

கரூரில் 41 பேர் பலி விவகாரத்தில் நெருக்கடி; குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்க சிபிஐ தீவிரம்: கட்சி நிதி தொடர்பாக இன்று கிடுக்கிப்பிடி விசாரணை

 

புதுடெல்லி: கரூரில் 41 பேர் பலி விவகாரத்தில் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்க சிபிஐ தீவிரம் காட்டியுள்ள நிலையில், கட்சியின் நிதி தொடர்பாக இன்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் கண்காணிப்பில், சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியதுடன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகி ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடமும், மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி-யிடமும் ஏற்கனவே விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் சிபிஐ அனுப்பிய சம்மன் அடிப்படையில் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகி இருந்த விஜயிடம், பிரசார கூட்டத்திற்கு அவர் காலதாமதமாக வந்ததுதான் இந்த துயர சம்பவத்திற்கு காரணமா என்ற கோணத்தில் சுமார் ஏழு மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் விஜய் தரப்பில், ‘தமிழகத்தில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்னதாகவே திட்டமிட்டு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் வேறொரு விசாரணை தேதியை வழங்கினால் நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற சிபிஐ அதிகாரிகள், விஜயை வரும் 19ம் தேதி அதாவது இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என்று கடந்த 13ம் தேதி சம்மன் அனுப்பி வைத்திருந்தனர்.

சிபிஐ அனுப்பிய சம்மன் அடிப்படையில் ஆஜராக நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி வந்தடைந்தார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர், இன்று காலை சுமார் 10.30 மணியளவில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம், தவெக கட்சியின் பொதுக்கூட்டம் நடத்த வெளிநாடுகளில் இருந்து பணம் பெறப்பட்டதா, அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதற்கான கணக்கீட்டு விளக்கம் என்ன, சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் தொகை பெறப்பட்டதா, அதற்கான ஆதாரங்கள் என்ன, இதற்கு யார் உடந்தையாக செயல்பட்டனர் என்று அடுக்கடுக்கான கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர். குறிப்பாக பிரசார கூட்டம் நடத்துவதற்கும், கட்சியை வழிநடத்துவதற்கும் செய்யப்படும் செலவுகள் எப்படி முறைப்படுத்தப்படுகிறது என்பது தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோணங்களில் சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து பல கோடி தொகை பெறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், தவெக கட்சியின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியையும் விசாரணை வளையத்திற்குள் சிபிஐ அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை விவகாரங்கள் குறித்தும், கட்சியின் வரவு செலவு கணக்குகள் குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து விஜய் மற்றும் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் இன்று மாலைக்குள் விசாரணையை முடிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விஜயிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவரது தரப்பில் முன்வைக்கப்பட்ட வாக்குமூலத்திற்கு சிபிஐ தரப்பில் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த வகையில் விஜயிடம், ‘கரூர் பிரசாரத்தின் போது தமிழ்நாடு காவல்துறை வழங்கியுள்ள சிசிடிவி காட்சிகளில் தண்ணீர் பாட்டில்கள் வீசுவது தெரிகிறது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட அதே சமயத்தில் தான் வீசியுள்ளார்கள். அப்போது கூட்ட நெரிசலை நீங்கள் பார்க்கவில்லையா.

குறிப்பாக ஏழு மணி நேரம் தாமதமாக வந்தது ஏன் என்ற கேள்விக்கு சாலைகளில் பல்வேறு வளைவுகள் இருந்துள்ளது. அவற்றையெல்லாம் கடந்து வர தாமதமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளீர்கள். தாமதம் வளைவுகளால் மட்டும் தான் ஏற்பட்டது என்றால், அதற்கான ஆதாரம் என்ன என்பதை இன்றே சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூட்ட நெரிசல் தொடர்பாக காவல்துறை பொது அறிவிப்புகளை தொடர்ந்து செய்து வந்துள்ள வீடியோக்களை சமர்ப்பித்துள்ளனர். அதே சமயம் உங்களுடைய வாகனம் கூட்டத்தில் தொடர்ந்து முன்னேறி சென்று வருவதையும் காட்சிகளில் பார்க்க முடிகிறது. கூட்ட நெரிசலைத் தடுக்க வாகனத்தை நிறுத்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்ததற்கான காரணம் என்ன. வாகனத்தின் மேல் இருந்த உங்களுக்கு கீழே நிலைமை மோசமாகி இருந்ததை அறியவில்லையா.

குறிப்பாக நடந்தவற்றையெல்லாம் அடிப்படையாக கொண்டு உங்களது பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க வாய்ப்புள்ளது’ என்று விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து கரூர் துயர சம்பவம் தொடர்பான விவகாரத்தில் பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரம் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது.

Tags : CBI ,Vijay ,New Delhi ,Velusamypuram, ,Karur district ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு...