×

வடசென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம்: வரும் 31ம் தேதி வரை நடக்கிறது

சென்னை: வடசென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் பெற வரும் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுவதாக கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இன்று வெளியிட்ட அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பஸ் பாஸ் விண்ணப்பித்து பெற ஏதுவாக, சிறப்பு முகாம் மூலம் ஆன்லைனில் பஸ்பாஸ் விண்ணப்பித்து பெற்றிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடசென்னை மாவட்டத்தில் வசிக்கும், பார்வை திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், அனைத்து வகை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள், பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், சிகிச்சை மற்றும் பயிற்சி எடுக்கும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை விண்ணப்பித்து சுலபமாகப் பெற்றிட, வரும் 31ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் (அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து) சிறப்பு முகாம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள (பின்புறம் இ-சேவை அருகில்) வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பஸ் பாஸ் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்று. ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன், பணிப்புரியும் மாற்றுத்திறனாளிகள் எனில் பணிச்சான்றுடனும், கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் எனில் கல்வி சான்றுடனும், சிகிச்சை மற்றும் பயிற்சி எடுக்கும் மாற்றுத்திறனாளிகள் எனில் தசைப்பயிற்சி மற்றும் மருத்துவ சிகிச்சை பெறும் மருத்துவமனையின் மருத்துவசான்றுடனும் சிறப்பு முகாமில் கலந்துக்கொண்டு ஆன்லைனில் பஸ் பாஸ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : North Chennai ,Chennai ,Collector ,Rashmi Siddharth Jagade ,Chennai District ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...