துவரங்குறிச்சி, ஜன. 5: திருச்சி மாவட்டம் மருங்காபுரி பகுதியில் அதிக அளவில் அரசு மதுபானங்கள் அனுமதியின்றி விற்கப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்தின் தனிப்படை போலீசார் வளநாடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மருங்காபுரி மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (39) என்பவர் விற்பனைக்காக சுமார் 50க்கும் மேற்பட்ட மதுபானங்களை வாங்கிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்து வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து வளநாடு காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 50 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
