×

2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். மேலும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பும் வழங்கப்பட உள்ளது.

பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசு தொகுப்பும், வேட்டி சேலைகளும் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. கலைஞர் ஆட்சியில் 2009ம் ஆண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரொக்க பணத்துடன், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் பொங்கல் பரிசை ஒவ்வொரு ஆண்டும் அரசு வழங்குகிறது. இந்நிலையில், கடந்த 2025ம் ஆண்டு பொங்கலையொட்டி தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தகவல் தெரிவித்தது.

தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் எவ்வளவு ரொக்க பணம் வழங்குவது என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று தமிழக அரசு வெளியிட்டது. அதில் அரிசி அட்டைதாரர்களுக்குக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள் ஆகும்.

பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதன் மூலம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959 செலவில் வழங்கப்படும். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிட அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது. அதனால், ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் முறை பின்பற்றப்படுகிறது.

இதற்காக ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த தேதியில், எந்த நேரத்தில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த டோக்கன் விநியோகம் பணி ரொக்க பணம் அறிவிப்பு வெளியான உடனே தொடங்கியது. ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன்களை வழங்கினர்.

தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 8ம் தேதி சென்னை ஆலந்தூர் பட்ரோட் சாலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கும்.

ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் முதல் நாளில் முற்பகல் மற்றும் பிற்பகலில் தலா 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இரண்டாம் நாள் முதல் தினந்தோறும் முற்பகல் மற்றும் பிற்பகலில் தலா 150 முதல் 200 பேர் வரைக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக 1500 குடும்ப அட்டைகளுக்கு மேல் இணைக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகளுக்கு பரிசு தொகுப்பை வினியோகிக்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நிறைவடையும் வகையில் டோக்கன்களில் தேதி குறிப்பிட்டு வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

* பொங்கல் பரிசு டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், 2026-ம் ஆண்டிற்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப் பணத்தை வழங்கத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு, ரொக்கப்பணம் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.3,000 வழங்கப்படும்.

வரும் ஜனவரி 8 முதல் மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, நேற்று (4ம் தேதி) முதல் வீடுகளுக்கே சென்று பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மக்கள் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

* டோக்கன்கள் வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குதல், டோக்கன்கள் வழங்குவது குறித்து கூட்டுறவுத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

* நியாயவிலைக்கடைகள் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திடத் தேவைப்படும் டோக்கன்களை கூட்டுறவுத்துறை மூலம் அச்சிட்டு வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* குடும்ப அட்டைதாரர்களுக்கு சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும். முதல் நாளில் முற்பகல் மற்றும் பிற்பகலில் தலா 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும், இரண்டாம் நாள் முதல் தினந்தோறும் முற்பகல் மற்றும் பிற்பகலில் தலா 150 முதல் 200 பேர் வரைக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்.

* டோக்கன்களை சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடை பணியாளர்கள் மட்டுமே விநியோகிக்க வேண்டும். நியாயவிலைக்கடையைச் சாராத வேறு நபர்கள் அல்லது அரசியல் சார்ந்த நபர்களைக் கொண்டு டோக்கன்கள் விநியோகம் செய்யக் கூடாது.

* டோக்கன்கள் மற்றும் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகளுக்கு கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்து கொள்ளலாம்.

* அதிக கூட்ட நெரிசல், பிரச்னை எழக்கூடிய நியாயவிலைக்கடைகள் காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் போதிய காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

* அனைத்து நியாயவிலைக்கடையிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு போதிய அளவில் முன்கூட்டியே இருப்பு வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்வதுடன், உரிய தரத்துடன் இருப்பதனையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* பொங்கல் தொகுப்பு டோக்கன்கள் விநியோகம் குறித்த விவரங்களைத் தினந்தோறும் மாலை 5 மணிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதலை பின்பற்றி பொங்கல் தொகுப்பு மற்றும் டோக்கன்கள் விநியோகத்தை சிறப்பான முறையில் செயல்படுத்திட கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்
படுகிறது. இவ்வாறு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்! உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குகிறது நமது திராவிட மாடல் அரசு! பொங்கலோ பொங்கல். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : K. Stalin ,Chennai ,Tamil ,Pongal festival ,
× RELATED 100 கிக் தொழிலாளர்களுக்கு மானிய...