சென்னை: தனிப்பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலைதான் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; திமுக தலைமையிலான கூட்டணியைவிட ஒரு வலுவான அணி இதுவரை தமிழ்நாட்டில் உருவாகவில்லை. பல மாதங்களாக அதிமுக, பாஜக அழைத்தும் யாரும் அவர்களுடன் கூட்டணிக்கு சேரவில்லை. திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்கிற நிலை வந்ததாக மார்க்சிஸ்ட் கருதவில்லை.
தனிப்பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலைதான் உள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைத்த பிறகு, எதற்காக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு, அவசியம் எழவே இல்லை. அதிமுக – பாஜக லாவணி கச்சேரி பல மாதங்களாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. கூட்டணி ஆட்சியா அல்லது அதிமுக ஆட்சியா என்ற பிரச்சனைக்கு முதலில் அவர்கள் தீர்வு காண வேண்டும். தமிழ்நாட்டின் வரலாற்றில் கூட்டணி ஆட்சி என்பதே இருந்தது கிடையாது.
அதிமுக கைப்பற்றி கொண்டிருக்கும் பாஜக, தைரியமாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்கிறது. அதிமுகவும் பாஜகவும் எப்படி இணைந்து தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமித்ஷாவின் பேச்சு, அதிமுக- பாஜக கூட்டணி குறித்து மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

