சென்னை: மூன்று ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக மசோதாவை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமிக்கவும், நீக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டது. அதேபோல், பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நிதித்துறை செயலரை நியமிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்திருந்தது.
உயர் கல்வித்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த நிலையில், அதனை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பி வைத்தார். ஒன்றிய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ள விவகாரம் என்பதால், இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்திருந்தார். இந்த மசோதா 3 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த நிலையில், தற்போது மசோதாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த விவரம் தமிழக சட்டத்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கவும் நீக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் பல மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அந்த மசோதாக்களின் நிலை என்ன என்பது தற்போது தெரியவில்லை. அதாவது, பாரதியார் பல்கலை, பெரியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை உள்ளிட்ட பல்கலைக்கழக மசோதாக்களின் நிலை ஓரிரு நாட்களில் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
