×

தொடர் விடுமுறை எதிரொலி: நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

 

ஊட்டி: தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் அனைத்து சுற்றுலா தலங்களும் களைகட்டி உள்ளது. பள்ளி அரையாண்டு தேர்வு, கிறிஸ்துமஸ் விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா, ஷூட்டிங்மட்டம் உள்பட சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டு வருகின்றனர். இவர்கள் வரும் வாகனங்களால் நகரின் முக்கிய சாலைகளான கூடலூர்-ஊட்டி சாலை, குன்னூர்-ஊட்டி சாலை, பூங்கா சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேலும், உணவு விடுதிகள், ஓட்டல்களில் மதிய நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புறநகர் பகுதிகளில் சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு உணவு மற்றும் பல்வேறு தேவைகளுக்காக அதிகளவு சுற்றுலா பயணிகள் பகல் நேரங்களில் ஊட்டிக்கு வரும் போது, கமர்சியல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க போக்குவரத்து போலீசார் பூங்கா செல்லும் வாகனங்களை டிபிஓ, கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக தாவரவியல் பூங்காவிற்கு செல்ல அனுமதித்துள்ளனர். அதேபோல் தாவரவியல் பூங்காவில் இருந்து வெளியில் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது.

எனினும், அவ்வப்போது ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் அனைத்து சுற்றுலா தலங்களும், கடை வீதிகளும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. ஊட்டி படகு இல்லத்தில் நீண்ட நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டனர். சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Nilgiri ,Ooty ,Neelgiri district ,Nilgiri District ,Christmas ,
× RELATED சட்டசபை தேர்தலில் போட்டியா? நடிகை குஷ்பு பேட்டி