வாஷிங்டன்: நைஜீரியாவில் கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்கிய ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கப் படைகள் கிறிஸ்துமஸ் தினத்தில் அதிரடி தாக்குதல் நடத்தின. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது ஓர் இனப்படுகொலை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், மத ரீதியிலான வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், நைஜீரியாவை ‘குறிப்பிடத்தக்க கவலைக்குரிய நாடு’ என்று இம் மாதத் தொடக்கத்தில் அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்நிலையில், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தற்போது முதல்முறையாக நேரடி ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சோகோடோ மாநிலத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நேற்று சரமாரியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. நைஜீரிய அரசின் ஒப்புதலுடனும், அவர்களின் கோரிக்கையின் படியும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ஆப்பிரிக்கப் படைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஏராளமான ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கிறிஸ்தவர்களை படுகொலை செய்யும் ஐஎஸ் பயங்கரவாதக் கும்பலை குறிவைத்து துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆகவேண்டும் என்று ஏற்கனவே எச்சரித்திருந்தேன். பல நூற்றாண்டுகளாக இல்லாத வகையில் தற்போது கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
