சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உழவே தலை! உலகத்தவரின் பசிப்பிணி போக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்! வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை, வேளாண் வணிகத் திருவிழா, வேளாண் கண்காட்சி, உழவன் செயலி, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், இலவச மின்சார இணைப்புகள் என உழவர்களுக்காக நமது திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து சாதனை புரிகிறது தமிழ்நாடு.
உழவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் போராடி, உழவர் நலனைப் பாதுகாக்கிறோம். MGNREGA திட்டத்தைக் குலைத்து விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. உழவர் நலனைக் காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
