×

கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

*டிஆர்ஓ ராம்பிரதீபன் வழங்கினார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை டிஆர்ஓ வழங்கினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ ராம்பிரதீபன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மாலதி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, அரசு நலத்திட்ட உதவிகள், பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், சுய தொழில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 372 பேர் மனு அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க டிஆர்ஓ உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, தரைதளத்தில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு காதொலி கருவி, பார்வை திறன் குறைந்தவர்களுக்கான செல்போன், ஊன்று கோல், நவீன செயற்கை கால், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், பேட்டரி சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி உள்பட 25 பேருக்கு ரூ.9.93 லட்சம் மதிப்பிலான உதவிகளை டிஆர்ஓ ராம்பிரதீபன் வழங்கினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.கலெக்டர் அலுவலக வளாகத்தில், தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, வழக்கம் போல கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் சென்று உதவினர்.

Tags : Collector's Office ,DRO ,Rampradeepan ,Thiruvannamalai ,Tiruvannamalai Collector's Office ,Rampradeepan.… ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...