×

தமிழ்நாடு விண்வெளி தொழில்நுட்ப நிதி பெற விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: விண்வெளித் தொழில்நுட்ப புத்தொழில் நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்வெளித் தொழில்நுட்ப துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொட்ரபாக வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் இயங்கும் விண்வெளித் தொழில்நுட்பத் துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு இணை பங்கு முதலீடு வழங்கும் தமிழ்நாடு விண்வெளித் தொழில்நுட்ப புத்தொழில் நிதித்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வழியாக செயல்படுத்தப்படுகிற இத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெற தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை இணை பங்கு முதலீடு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தகுதி வாய்ந்த நிபுணர் குழு கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டு, நிபுணர் குழுவின் பரிந்துரைக்கேற்ப முதலீட்டு நிதி வழங்கப்படும். மேலும், நிதியானது பல்வேறு கட்டங்களாக செயல்திறன் சார்ந்து மதிப்பிடப்பட்டே வழங்கப்படும். செயற்கைக்கோள் அமைப்பு, ஏவூர்தி தொழில்நுட்பம், பூமி கண்காணிப்பு தீர்வுகள், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான விண்வெளி பகுப்பாய்வு உள்ளிட்ட விண்வெளித் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் புதிய தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்கும் புத்தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் ஒன்றிய அரசின் டிபிஐஐடி தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த நிதி ஆண்டில் இத்திட்டத்திற்கென ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் https://form.startuptn.in/TNSTF தகுதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு StartupTN இணையதளத்தை பார்வையிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nadu ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu… ,
× RELATED ஜன.20ம் தேதி கடைசி நாள் கல்வெட்டியல்,...