அரூர், ஜன.19: அரூர் அடுத்த தொட்டம்பட்டி, நம்பிபட்டி கிராமங்களை இணைக்கும் வகையில், சுமார் 60ஏக்கர் பரப்பளவு கொண்ட மைலன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் தேக்கப்படும் நீரால், 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், அரூர் பெரிய ஏரிக்கு செல்கிறது. கடந்த 6 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், ஏரி வறண்டு கிடந்தது. தற்போது தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால், வாணியாறு அணை நிரம்பி ஒரு மாத காலத்திற்கு மேலாக தண்ணீர் ஆற்றில் செல்கிறது. இதனால் காரைஓட்டிலிருந்து, கால்வாய் வழியாக, மைலன் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று மைலன் ஏரி முழுவதும் நிரம்பி, அரூர் பெரிய ஏரிக்கு உபரி நீர் வெளியேறி வருகிறது. 6 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையொட்டி, தொட்டம்பட்டி விவசாயிகள் ஏரிக்கரையில் மலர் தூவி, கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.