- யூனியன் அரசு
- மக்களவை
- புது தில்லி
- பாராளுமன்ற உறுப்பினர்கள்
- காங்கிரஸ்
- ராகுல் காந்தி
- தலைவன்
- எதிர்ப்பு
- மத்திய உள்துறை இணை அமைச்சர்
- நித்யானந்த் ராய்
புதுடெல்லி: மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக, மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்களின் கேள்விகளுக்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: வரும் 2026 ஏப்ரல் முதல் 2027 பிப்ரவரி வரை 2 கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
முதல் கட்டத்தில் ஒவ்வொரு வீட்டின் நிலவரம், சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். 2வது கட்டத்தில் ஒவ்வொரு வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, சமூக பொருளாதார நிலை, கலாச்சாரம், பிற விவரங்கள் சேகரிக்கப்படும். 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் கட்டம் மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் வசதிக்கேற்ப 30 நாட்களுக்குள் நடத்தப்படும்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் லடாக் மற்றும் பனிப்பொழிவு நிறைந்த பகுதிகள் மற்றும் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் அக்டோபர் 1, 2026 அன்று காலை 00.00 மணிக்குள் கணக்கெடுப்பு முடிக்கப்படும். நாட்டின் மற்ற பகுதிகளில், மார்ச் 1, 2027 அன்று காலை 00:00 மணிக்குள் கணக்கெடுப்பு முடிக்கப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு பயனர்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதி செய்யப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடந்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் முடிவுப்படி, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் செய்யப்படும். இம்முறை மக்கள், மொபைல் செயலி மற்றும் இணையதளம் என டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் அவர்களே சுயமாக கணக்கெடுப்பு தகவல்களை பதிவு செய்யலாம் என்றார்.
