×

அக்டோபரில் பெய்த மழையால் சேதமடைந்த 4,235 ஹெக்டேர் பயிர்களுக்கு நிவாரணம்: பயிர்சேத கணக்கெடுப்பு உடனே தொடங்க வேண்டும்: முதல்வர் உத்தரவு

 

சென்னை: அக்டோபரில் பெய்த மழையால் சேதமடைந்த 4235 ஹெக்டேர் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், டிட்வா புயல் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.

டிட்வா புயல் நேற்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. டிட்வா புயல் காரணமாக மாநிலத்தில் 27.11.2025லிருந்து 1.12.2025 வரை நாகப்பட்டினம் (22.2 செ.மீ), மயிலாடுதுறை (13.2 செ.மீ), திருவாரூர் (10.2 செ.மீ), ராமநாதபுரம் (8.7 செ.மீ). தஞ்சாவூர் (8.6 செ.மீ) ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

பேரிடர் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஏற்கனவே முதல்வர் தலைமையில் கடந்த 27ம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. மேலும், 28ம் தேதி சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, டிட்வா புயல் காரணமாக அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று முதல்வர் தலைமையில், வடகிழக்கு பருவமழையால், குறிப்பாக டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தற்போது பெய்துவரும் மழையினால், வேளாண் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் குறித்தும், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மேலும், அக்டோபர் மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து 33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 எக்டர் வேளாண் பயிர்களுக்கும், 345 எக்டர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

டித்வா புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கு இழப்பீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விரைந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 39 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். இப்பணிகளை தேவைப்படும் காலம் வரை தொடர்ந்து செய்துதர வேண்டும் என அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக செயலாளர் சாய்குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் தட்சிணாமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Chennai ,M.K. Stalin ,Chennai Secretariat ,Titva cyclone… ,
× RELATED மலேசியாவில் நடந்த கார் ரேஸில் பழுதாகி நின்ற அஜித் குமார் கார்