சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை பல்கலைக்கழகத்திற்கு 549 பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 150 பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசால் அளிக்கப்படும் நிதி உதவி சம்பளம் அளிப்பதற்கே சரியாக இருக்கிறது என்றும், பல்கலைக்கழக மானியக்குழு நிதி உதவி அளிப்பதை நிறுத்திவிட்டதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக துணைவேந்தர் நியமிக்கப்படாததன் காரணமாக வருவாயை உயர்த்துவதற்கான புதிய முயற்சிகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்றும், கடந்த 20 ஆண்டுகளாக கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
