×

திண்டுக்கல்லில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு: கலெக்டர் தலைமையில் நடந்தது

திண்டுக்கல், நவ. 27: மக்களாட்சி தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்திய திருநாட்டின் வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்து தந்த நமது அரசியலமைப்பு சட்டமாகும். இதன் 75வது ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து துறை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள்- நிறுவனங்கள், பள்ளி- கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை வாசித்து உறுதிமொழியேற்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து இந்திய அரசியலமைப்பு சட்ட தின முகவுரை உறுதிமொழியினை வாசிக்க அலுவலர்கள் ஏற்று கொண்டனர்.

அதன்படி சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படி நிலை, வாய்ப்பு நலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திட செய்யும், அவர்கள் அனைவரிடையேயும் தனி மனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்பு பேரவையில் 1949 நவம்பர் 26ம் நாளாகிய இன்று ஈங்கிதனால் இந்த அரசமைப்பினை ஏற்று இயற்றி நமக்கு நாமே வழங்கி கொள்கிறோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ. சேக் முகையதீன், கலெக்டரின் நேர்முக முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Indian Constitution Day Pledge Ceremony ,Dindigul ,Dr. ,Ambedkar ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்