×

பிரதமர் மோடி வலியுறுத்தல் அரசியலமைப்பு கடமைகளை மக்கள் நிறைவேற்ற வேண்டும்

புதுடெல்லி: அரசியலமைப்பு தினத்தையொட்டி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடமைகளை செய்வதிலிருந்து உரிமைகள் பிறக்கின்றன என மகாத்மா காந்தி கூறினார். இன்று எடுக்கப்படும் கொள்கைகளும், முடிவுகளும் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையை வடிவமைக்கும் என்பதை காந்தி வலியுறுத்தினார். இன்று வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி நாம் நகரும் போது, மக்கள் தங்கள் கடமைகளை தங்கள் மனதில் முதன்மையாக வைக்க வேண்டும். நமது நாடு நமக்கு நிறைய கொடுத்துள்ளது.

அந்த நன்றி உணர்வுடன் நமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். நமது ஒவ்வொரு செயலும் அரசியலமைப்பை வலுப்படுத்தவும், தேசிய இலக்குகள் மற்றும் நலன்களை மேலும் வலுப்படுத்தவும் வேண்டும். இந்த கடமை உணர்வுடன் நாம் செயல்படும் போது நமது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் பன்மடங்கு பெருகும். அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கி உள்ளது. அந்த உரிமையை ஒருபோதும் தவறவிடாமல் இருப்பது நமது கடமை. 18 வயது நிரம்பிய இளைஞர்களை கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ம் தேதி பள்ளிகள் கல்லூரிகளில் சிறப்பு விழாக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் நமது முதல் முறை வாக்காளர்கள் மாணவர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்பதை உணர்வார்கள்.

அரசியலமைப்பின் சக்திதான், என்னைப் போன்ற ஒரு எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் தொடர்ந்து பணியாற்ற உதவியது. 2014 ஆம் ஆண்டு, நான் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு வந்து, ஜனநாயகத்தின் மிகப்பெரிய கோயிலின் படிகளைத் தொட்டு வணங்கிய தருணங்களை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். இந்த அரசியலமைப்பு என்னைப் போன்ற பலருக்கு கனவு காணும் சக்தியையும், அந்தக் கனவுகளை நனவாக்கும் வலிமையையும் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஐதராபாத்தில் விமான இன்ஜின் ஆலை திறப்பு
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரான்ஸ் நிறுவனமான சப்ரானின் விமான இயந்திரங்களுக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் சீர்செய்தல் ஆலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

* சுதந்திரம் என்பது உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட
சர்தார் வல்லபாய் படேலின் 150வத பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக அவரது சொந்த ஊரான குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கரம்சாத் நகரில் ஒற்றுமை அணிவகுப்பு நேற்று நடந்தது. இதற்கான கொடியேற்ற விழாவில் பிரதமர் மோடியின் செய்தி வாசிக்கப்பட்டது. அதில் பிரதமர் மோடி, ‘‘அரசியலமைப்பு தினத்தன்று ஒற்றுமை பேரணி நடத்தப்படுவது இனிமையான தற்செயல் நிகழ்வு. சுதந்திரம் என்பது உரிமைகளை பற்றியது மட்டுமல்ல, கடமைகளையும் ஒற்றுமைக்கான அழைப்பையும் பற்றியது என்பதை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. இன்று, மக்கள் தானாக முன்வந்து பங்கேற்கும் ஒவ்வொரு முயற்சியிலும், அது டிஜிட்டல் இந்தியா, பிட் இந்தியா, தூய்மை இந்தியா என அனைத்திலும் தேசிய ஒற்றுமையை காண்கிறோம்’’ என்றார்.

Tags : PM Modi ,New Delhi ,Constitution Day ,Modi ,Mahatma Gandhi ,Gandhi ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...