×

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல ஆயிரம் கோடி நிதி; தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம்: சு.வெங்கடேசன் கண்டனம்

சென்னை: பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல ஆயிரம் கோடி நிதி; தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம் என சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நவ 25 ஆம் தேதி நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் நடைபெற்ற இரயில்வே துறை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இரயில்வே துறையின் நலன், தமிழகத்தின் வளர்ச்சி, மதுரையில் மேற்கொள்ள வேண்டிய விரிவாக்கப் பணிகள் குறித்து கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தேன்.

1. மூத்த குடிமக்களுக்கான பயணக்கட்டண சலுகையை மீண்டும் கொண்டு வருக

மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகை மார்ச் 20, 2020ல் நிறுத்தப்பட்டது. ஆறு கோடி பேர் முன்பதிவு பயணச்சீட்டும் ஆறு கோடி பேர் முன்பதிவு இல்லா பயணச்சீட்டும் வாங்கி 2019ல் பயணம் செய்துள்ளனர். பெண்களுக்கு 58 வயதில் 50% பயண சலுகையும், ஆண்களுக்கு 60 வயதில் 40% பயண சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. இது நிறுத்தப்பட்டதனால் மூத்த குடிமக்கள் மருத்துவதிற்காகவும், திருத்தலங்களுக்கும் செய்த பயணம் பெருமளவு குறைந்துவிட்டது. ஒன்றிய அரசு இந்த பயண சலுகைகளை மீண்டும் கொண்டுவர மறுத்து வருகிறது. அதே மார்ச் 2020 காலத்தில் நிலக்கரியும் இரும்புத்தாதும் இரும்பும் ஏற்றிச்செல்லும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர்கள் ஏற்றி செல்லும் தூரத்தைப் பொறுத்து 20 சதம் மற்றும் 15 சதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல சில கார்ப்பரேட் நிறுவனங்கள் ரயில் சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ளும் போது வேகனின் கொள் சக்தியை விட அதிகமாக ஏற்றி செல்கிறார்கள். இது பாதுகாப்புக்கு விரோதமானது. எனவே அப்படி ஏற்றிச் செல்பவர்களுக்கு ஒரு வேகனுக்கு ரூபாய் 5000 தண்டனை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதனை அதே மார்ச் 2020 இல் ரத்து செய்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்துள்ளனர். ஆனால் மூத்தக்குடி மக்களுக்கு ரயில் பயண சலுகை மீண்டும் கொண்டுவர மறுப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை. அதை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தியுள்ளேன்.

2.ரயில்வே பட்ஜெட் ஆவணமான பிங்க் புத்தகத்தை மீண்டும் கொண்டு வருக!

நடப்பு பட்ஜெட்டுக்கு முன்பு வரை ரயில்வேயுனுடைய திட்டங்களை “பிங்க் புத்தகம்” என்பதில் வெளியிடுவார்கள். இது பட்ஜெட் வெளியிட்ட அன்று இணையதளத்தில் ஏற்றப்படும். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் அதன் மீது தங்கள் கருத்துக்களை வழங்குவதற்கு வசதியாக இருந்தது. ஆனால் கடந்த இரு பட்ஜெட்டுகளின் போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை பிங்க் புத்தகம் வெளியிடப்படவில்லை. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்கள் தெரிவிக்க முடியாமல் பாதிக்கப்பட்டது. இது பற்றி நாடாளுமன்றத்திலேயே வலிமையாக சுட்டிக்காட்டியுள்ளோம்.
நடப்பு ஆண்டில் அவர்கள் “தொகுக்கப்பட்ட பட்ஜெட் அறிக்கை” என்ற பெயரில் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பிங்க் புத்தகத்தில் திட்டத்தின் பெயரும் அதற்கு ஆகும் மொத்த செலவும். இதுவரை செய்யப்பட்ட செலவும் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியும் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். இது ஒவ்வொரு மாநில மக்களும் தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட திட்டங்களின் நிலையை அறிய பயன்பட்டது. ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள தொகுக்கப்பட்ட பட்ஜெட் அறிக்கை என்பது மிகவும் விவரங்களை மறைப்பதாக உள்ளது. அது எந்த வகையிலும் புரிந்துகொள்ள உதவவில்லை. தரவுகளையும் உண்மையான புள்ளிவிபரங்களையும் மக்களிடமிருந்து மறைப்பது அடிப்படையான ஜனநாயக விரோத செயலாகும். எனவே பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிட நான் வலியுறுத்தியுள்ளேன்.

3.ரயில் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் ஓரவஞ்சனை

கடந்த ஆண்டு திருத்தப்பட்ட பட்ஜெட்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ 31,458 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் இதில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் 301 கோடி மட்டுமே. அதாவது ஒரு சதவிகிதம் மட்டுமே தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை; திண்டிவனம் -நகரி; அத்திப்பட்டு- புத்தூர்; ஈரோடு- பழனி ;சென்னை- கடலூர் மகாபலிபுரம் வழியாக; மதுரை-தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக; திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக்கோட்டை- திருபெரும்புதூர்; மொரப்பூர் -தர்மபுரி ஆகிய புதிய பாதை திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சில சமயம் அவை உறைய வைக்கப்பட்டதாக கூறுகின்றனர். சில சமயம் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தவில்லை என்கின்றனர். தமிழக அரசைகேட்டால் பணம் கொடுத்தால் தானே நிலம் கையகப்படுத்த முடியும் என்று பதில் அளிக்கிறார்கள். இதேபோல கேரளத்தில் திருன்ன வாயா- குருவாயூர்; அங்கமாலி- சபரிமலை புதிய பாதை திட்டங்கள் தமிழக திட்டங்களை போலவே வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காட்பாடி -விழுப்புரம்; சேலம்- கரூர் -திண்டுக்கல்; ஈரோடு -கரூர் ஆகிய இரட்டை பாதை திட்டங்கள் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறது

அதே நேரத்தில் பாஜக ஆளுகின்ற மாநிலங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக ஆகஸ்ட் 7ஆம் தேதி பொருளாதார நடவடிக்கைகளுக்கான அமைச்சரவை குழு மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், குஜராத், சத்தீஸ்கர் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களுக்கு 18 மாவட்டங்களை உள்ளடக்கிய பல தண்டவாள திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 894 கிலோ மீட்டர் கொண்ட இந்த திட்டத்திற்கு ரூ24,634 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.இந்த திட்டம் 2030-31 க்குள் முடிவடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வர்தா -புசாவல் மூணாவது நாலாவது லைன்; குண்டியா தங்கர்கர் நாலாவது லைன்; வடோதரா-ரெட்லம் மூணாவது நாலாவது லைன்; இட்டார்சி போபால்- பினா நாலாவது லைன் ஆகிய திட்டங்கள் அவை. இவை 3633 கிராமங்களை இணைக்குமாம். பிரதம மந்திரியின் கதி சக்தி தேசிய திட்டத்தின் அடிப்படையில் இது ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல செப்டம்பர் 24ஆம் தேதி பீகாரை மையப்படுத்தி பக்தியார் பூர்- ராஜ்கீர் -திலையா பிரிவின் இரட்டை பாதை

திட்டத்திற்கு ரூ2192 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 1434 கிராமங்களை அது கடந்து செல்லும். இதுவும் பிரதமர் கதி சக்தி திட்டம் தான். அதேபோல பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகல்பூர் ஃ-தம்காராம்பூர் ஹட் ஆகிய இரட்டை பாதை திட்டத்திற்கு ரூ3169 கோடி ஒதுக்கப்படுகிறது. 441 கிராமங்களை இது கடந்து செல்லும். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மேற்கண்ட திட்டங்களுக்கான மொத்த தொகை ரூ 29,995 கோடியாகும். ஆனால் இதே காலத்தில் பிரதமர் கதி சக்தி திட்டத்தின் பெயரிலோ அல்லது வேறு எந்த பெயரிலோ தெற்கு இரயில்வேக்கு எந்த திட்டமும் அறிவிக்கபடவில்லை. நிதியும் தரப்படவில்லை. தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நிதி ஒதுக்குவதில் புதிய லைன்களுக்கும், இரட்டை பாதை திட்டத்துக்கும் கொடுமையான பாரபட்சம் காட்டப்படுகிறது. தமிழக கேரள திட்டங்களும் பிரதம மந்திரி கதிசக்தி திட்டத்தில் இணைக்கப்பட்டு போதிய பணம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி உள்ளேன்.

4.கூடல் நகர் மற்றும் போத்தனூரை இரண்டாவது முனையமாக மாற்றுக!

கோயம்புத்தூர் மிகவும் நெருக்கடியான முனையமாக மாறி உள்ளது. 38 ரயில் வண்டிகள் இங்கிருந்து புறப்பட்டு திரும்ப வந்து சேர்கின்றன. அதேபோல 110 ரயில்கள் அதன் வழியாக நின்று கடந்து செல்கின்றன. இதனால் இரண்டாவது முனையம் உருவாக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. போத்தனூரில் போதிய நிலம் உள்ளது. எனவே போத்தனூரை இரண்டாவது முனையமாக மாற்றிட வேண்டும். அப்பொழுது தான் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு இடையில் போதுமான இரயில் இணைப்புகளை உருவாக்க முடியும்.
அதே போல மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது இரயில் நிலையமாக மாற்ற கோரியுள்ளேன்.

5. இன்டர்லாக் செய்யாத கேட்டுகளை இன்டர்லாக் கேட்டுகளாக மாற்றிட தெற்கு ரயில்வேக்கு போதிய நிதி வழங்கிடுக! கேட் மென்களுக்கு எட்டு மணி நேர வேலை வழங்கிடுக!

அண்மையில் கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் லெவல் கிராசிங் கேட்டில் ரயில் மோதி பள்ளி வேன் விபத்துக்குள்ளாகி மூன்று பள்ளி குழந்தைகள் உயிரிழந்த சோகம் ஒவ்வொருத்தருடைய மனசாட்சியையும் உலுக்கியது. அந்த கேட் சிக்னல் போட்டாலும் திறக்க முடியும் என்கிற நிலையில் இருந்த இன்டெர்லாக் செய்யாத கேட் ஆகும். தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஒரு செயல்திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் இன்டெர் லாக் செய்யாத கேட்டுகளை இன்டெர் லாக் கேட்டுகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதைப்போல 8 மணி நேர வேலை அமுலாக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 2022-23 காலத்துக்கான தெற்கு ரயில்வேயின் முக்கியமான அம்சங்கள் குறித்த அறிக்கையில் தெற்கு ரயில்வேயில் உள்ள 1822 ஆள் உள்ள கேட்டுகளில் 1461 இன்டெர்லாக் செய்யப்பட்டு விட்டதாகவும் 361 பாக்கி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேக்கு இந்த கேட்டுகளை இன்டெர் லாக் செய்வதற்கு போதிய நிதியை விடுவிக்குமாறு கோரிக்கையை எழுப்பி உள்ளேன். அது மட்டுமல்ல 8 மணி நேர வேலை அமல்படுத்தினால் தேவைப்படும் போதிய ஊழியர்களை நியமிக்க தெற்கு ரயில்வேக்கு அனுமதி வழங்கவும் கோரி உள்ளேன்.

6.கொல்லம் நாகூர் விரைவு வண்டியை மீண்டும் இயக்கிடுக!

தென்காசி, விருதுநகர்,மதுரை திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக கொல்லத்திலிருந்து நாகூர் வரை மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது ஒரு ரயில் அனைத்து மத திருத்தலங்களையும் இணைத்து ஓடிக் கொண்டிருந்தது. அது மிகவும் மக்களால் விரும்பப்பட்டு முழு கொள்ளளவு உடன் ஓடிக் கொண்டிருந்தது. அகலப்பாதை ஆக்கப்பட்ட பின் அந்த வண்டி நிறுத்தப்பட்டது. அந்த வண்டியை மீண்டும் இயக்கிட கோரிக்கை எழுப்பி உள்ளேன்.

7.தேவையான காலியிடங்களை நிரப்பிட தெற்கு ரயில்வே கோரிக்கையை ஏற்றிடுக!

தெற்கு ரயில்வேயில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அத்துடன் வட இந்திய ஊழியர்கள் தெற்கு ரயில்வேயில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்கள் ஊருக்கு திரும்ப செல்ல இடமாற்றத்திற்கு பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களின் தேவையையும் உள்ளடக்கி தேவையானர்களை தேர்வு செய்ய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளிப்பதில்லை. உதாரணமாக அண்மையில் 9000 காலியிடங்களை நிரப்ப தெற்கு ரயில்வே கோரியபோது 2000 மட்டுமே தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டது. 600 டிரைவர்களை நிரப்ப கூறிய போது 200க்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் காலியிடங்களை நிரப்புவதும் வெளி மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்வதும் பிரச்சனையாகியுள்ளது. எனவே தெற்கு ரயில்வே கோரி உள்ளபடி போதுமான எண்ணிக்கையில் ஊழியர்களை தேர்வு செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

8.அங்கீகாரம் பெற்ற டி ஆர் இ யூ சங்கத்துக்கு நிர்வாகத்தில் பங்களிக்கும் பிரேம் வசதி மறுப்பதை மாற்றி பிரேம் வசதி வழங்கிடுக!

டி ஆர் இயு சங்கம் சிஐடி யு உடன் இணைந்தது. இந்த சங்கத்துக்கு ரயில்வேயில் அங்கீகார சங்கங்களுக்கு வழங்குகிற பிரேம் வசதி மறுக்கப்பட்டு வருகிறது. இதே சங்கம் 2007 முதல் 2013 வரை அங்கீகார சங்கமாக இருந்தபோது இந்த சலுகை வழங்கப்பட்டது. இதனால் ரயில்வேயில் பாதுகாப்பு, பயணிகள் வசதிகள், ரயில்வே ஊழியர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் அங்கீகார சங்கத்தையும் கலந்து ஆலோசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை 26 ஆயிரம் வாக்கு பெற்ற டி ஆர் இயுவுக்கு மறுப்பது 26 ஆயிரம் தொழிலாளர்களை புறக்கணிப்பதாகும். எனவே அந்த சங்கத்துக்கு மீண்டும் பிரேம் வசதி வழங்கிட நான் கோரி உள்ளேன்.

9.மதுரையை மையப்படுத்திய கோரிக்கைகள்; மதுரை கூடல் நகரில் மெழு பணிமனை தேவை :

தென் தமிழகத்தின் தலைநகராக, நுழைவு வாயிலாக விளங்கும் மதுரைக்கு அருகாமை நகரங்களிலிருந்து வர்த்தகம், வேலைவாய்ப்பு. கல்வி, சுற்றுலா மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்காக ஏராளமான மக்கள் தினந்தோறும் வருகின்றனர். ஆனால், மதுரைக் கோட்டத்தின் தலைமையிடமாக இருந்தாலும், வெறும் 5 பயணிகள் இரயில் மட்டுமே இங்கு இயக்கப்படுகிறது…மாறாக, கோவை, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி கோட்டங்களில் தலா 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து பயணிக்கும் பொதுமக்களின் நலன் கருதி, மதுரையிலிருந்து மேலும் 5 பயணிகள் ரயில்களை பின்வரும் வழித்தடங்களில் இயக்க பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மதுரை – திருநெல்வேலி – திருச்செந்தூர்

* மதுரை – தூத்துக்குடி
* மதுரை வழியாக போடிநாயக்கனூர் – பழனி மானாமதுரை, காரைக்குடி வழியாக மதுரை திருச்சிராப்பள்ளி (மெமு)
*மதுரை – மானாமதுரை அருப்புக்கோட்டை விருதுநகர் திருமங்கலம் -திருப்பரங்குன்றம் -மதுரை வட்ட ரயில் (மெமு)
இவற்றை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு குறுகிய கால நடவடிக்கையாகும்.

எதிர்கால நலன் கருதி நீண்ட கால நடவடிக்கை பின்வருமாறு;

விருதுநகர், சிவகாசி, தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மானாமதுரை, பரமக்குடி, ராமேஸ்வரம், திண்டுக்கல், பழனி, போடிநாயக்கனூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு மதுரையை மையமாகக் கொண்ட மெமு இரயில்கள் இயக்கப்பட ஏற்றவாறு, மதுரை கூடல் நகரில் மெமு பணிமனை அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறேன். ஒட்டுமொத்த தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மதுரையில் அமையும் மெழு பணிமனை பெருவாய்ப்பாக அமையும்.

புதிய இரயில் பற்றிய கோரிக்கைகள் :

* ஏற்கனவே ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மதுரை வழியாக ராமேஸ்வரம் – மங்களூர் அதிவிரைவு இரயிலை விரைவாக இயக்க வேண்டும்..இந்த இரயில் வட-கேரளா மற்றும் கொங்கன் பகுதிகளுக்கு சிறந்த இணைப்பை வழங்குகிறது.
* மதுரை – அகமதாபாத் இடையே வாரம் இருமுறை அதிவிரைவு இரயில்.
* மதுரை – ஷாலிமார் இடையே வாரம் இருமுறை அதிவிரைவு இரயில்.
* மதுரை வழியாக ராமேஸ்வரம் ஸ்ரீநகர் வரை அமிர்த பாரத் விரைவு இரயில்

திப்ருகர் – மதுரை வரை வாரம் மூன்று முறை அதிவிரைவு இரயில்.

* செங்கோட்டை, கொல்லம் வழியாக மதுரை எல்டிடி மும்பை வரை வாரம் இருமுறை விரைவு இரயில்.
* மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி வழியாக தூத்துக்குடி எல்டிடி மும்பை வாரம் இருமுறை விரைவு இரயில்.
* மதுரை, திருவண்ணாமலை வழியாக ராமேஸ்வரம் திருப்பதி வாரம் மூன்று முறை இன்டர்சிட்டி விரைவு இரயில்.
* தென்காசி, மதுரை, ஓசூர் வழியாக திருநெல்வேலி – பெங்களூரு தினசரி இரவு நேர விரைவு இரயில்.
திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, மதுரை வழியாக ஈரோடு ராமேஸ்வரம் இரவு நேர விரைவு இரயில்.
* மதுரை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக ஈரோடு கொல்லம் விரைவு இரயில்.
* தூத்துக்குடி – தாம்பரம் வழியாக காரைக்குடி இரவு நேர விரைவு இரயில்.

புதிய ரயில் பாதைகள்:

* மதுரை – தூத்துக்குடி புதிய இரயில் பாதை (ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது) விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும்.
* மதுரை – மேலூர் காரைக்குடி – புதுக்கோட்டை தஞ்சாவூர் புதிய இரயில் பாதை. (இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை)
* மதுரை – மேலூர் திருச்சிராப்பள்ளி விராலிமலை வழியாக புதிய இரயில் பாதை (இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை)
சிவகங்கை வழியாக மதுரை தொண்டி புதிய இரயில் பாதை (இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை)
* ஈரோடு – பழனி புதிய இரயில் பாதை (அங்கீகரிக்கப்பட்டது ஆனால் முடக்கப்பட்டுள்ளது)
*தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை மன்னார்குடி புதிய இரயில் பாதை.
* தஞ்சாவூர் – மயிலாடுதுறை – விழுப்புரம் பிரதான இரயில் பாதை இரட்டிப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்..இது தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு அதிக ரயில்களை இயக்குவதற்கு இன்றியமையாததாக அமையும்.

நீட்டிப்பு கோரிக்கைகள்:

* வண்டி எண் – 22497/22498 ஸ்ரீ கங்காநகர் திருச்சிராப்பள்ளி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் இரயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும்.வண்டி எண் – 20481/20482 – ஜோத்பூர் திருச்சிராப்பள்ளி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் இரயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். தெற்கு ரயில்வே முன்பு மதுரை – பகத் கி கோதி என்ற வாராந்திர சிறப்பு இரயிலை இயக்கியது, பின்னர் அது வாரம் ஐந்து முறை சென்னை – பகத் கி கோதி வழக்கமான ரயிலாக மாற்றப்பட்டுள்ளதால், இப்போது மதுரை – ஜோத்பூருக்கு எந்த தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. இந்த இரயில் மதுரை வரை நீட்டிக்கப்பட்டால் தடைப்பட்ட ஜோத்பூர் இணைப்பு மீண்டும் கிடைக்கும்.வண்டி எண் – 22611/22612 – புதிய ஜல்பைகுரி – எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவு இரயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். இந்த பழைய திட்டங்களை மறுபரிசீலனை செய்வது மூலம் தென் தமிழகத்திலிருந்து ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளுக்கான இணைப்பு மேம்படுத்தப்படும்.வண்டி எண் – 12375/12376 ஜசித்-தாம்பரம் வாராந்திர விரைவு இரயில் மதுரை வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும்.வண்டி எண் – 12611/12612 ஹஸ்ரத் நிஜாமுதீன் – எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் கரிப் ரத் விரைவு இரயில் மதுரை வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும். இது நமது தேசிய தலைநகர் டெல்லிக்கு கூடுதல் இணைப்பை அதிகரிக்கும். * வண்டி எண் – 22475/22476 ஹிசார் கோவை வாராந்திர முழு குளிர்சாதன வசதி கொண்ட இரயிலை திருப்பூர் ஈரோடு கரூர் திண்டுக்கல் வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும். இந்த நீட்டிப்பு மங்களூர், கோவா, மும்பை மற்றும் குஜராத்திற்கான தொடர்பை மேம்படுத்த உதவும்.

இயக்கத்தில் உள்ள இரயில்களின் மேம்பாடு :

* மதுரை – சென்னை மஹால் அதிவிரைவு இரயிலை வாரத்திற்கு இருமுறை இயக்குவதிலிருந்து அதிகரித்து தினசரி இரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.
* காட்பாடி வழியாக இயக்கப்படும் போடிநாயக்கனூர் சென்னை சென்ட்ரல் அதிவிரைவு இரயிலை வாரத்திற்கு மூன்று முறை இயக்குவதிலிருந்து அதிகரித்து தினசரி இரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.
* இராமேஸ்வரம் திருப்பதி அதிவிரைவு இரயிலை தினசரி இரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.
* இராமேஸ்வரம் கன்னியாகுமரி அதிவிரைவு இரயிலை தினசரி இரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், உற்பத்திப் பொருட்களை இலகுவாக ஏற்றுமதி-இறக்குமதி செய்வதற்கும் ஏதுவாக மதுரை கூடல் நகரில் ரோரோ வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். இவைகள் தவிர தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் பெருமளவு தூத்துக்குடி துறைமுகத்தை சார்ந்துள்ளன. எனவே எண்ணற்ற சரக்கு வண்டிகள் மதுரை இரயில் நிலையத்தை கடக்க வேண்டிய தேவை இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி உருவாகிறது. புதிய இரயில்களை இயக்கவும் வழியில்லாத நிலை ஏற்படுகிறது எனவே சரக்கு வண்டிக்கான பைபாஸ் வழித்தடம் ஒன்று மதுரைக்கு அவசியம் தேவைப்படுகிறது. சோழவந்தான் துவங்கி செவரக்கோட்டை வரையிலான புதிய பைபாஸ் வழித்தடம் அமைக்க விரிவான திட்ட ஆலோசனையை உரிய மாதிரி வரைபடத்துடன் வழங்கியுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : BJP ,Tamil Nadu ,Kerala ,Shu. Venkatesan ,Chennai ,Sue. ,Venkatesan M. B ,Minister of Railways ,Ashwini Vaishnav ,Railway ,Minister ,Aswini Vaishnav ,
× RELATED திருச்சி, மதுரை விமான சேவையை குறைத்தது இண்டிகோ விமான நிறுவனம்..!