சென்னை: அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தமிழக அரசு வரைவு வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்குகள் நேற்று உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரைவு வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தாக்கல் செய்தார்.
அதில், கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேருக்கு மேல் திரள்வார்கள் என்று எதிர்பார்க்க கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோட் ஷோக்கள், ஆர்ப்பாட்டம் போராட்டம் மற்றும் கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளுக்கு இந்த விதிகள் பொருந்தும். கூட்டக் கட்டுப்பாடு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்க செய்யும் இந்த விதிகளை அமல்படுத்துவது ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும்.
இடங்களை காவல் துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கலந்தாலோசித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்து அறிவிப்பார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோட் ஷோக்கள், ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தப்படும் முன் என்ன தேதி, நேரம், எதற்காக நடத்தப்படுகிறது, எவ்வளவு மக்கள் பங்கேற்பார்கள், எத்தனை வாகனங்கள் வரும், பங்கேற்கும் முக்கிய தலைவர்களின் விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
ரோட் ஷோக்களை பொருத்தவரை பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தை துவங்கும் இடம் மற்றும் முடிக்கும் இடங்களையும், பொதுக்கூட்டங்கள் நடைப்பெறும் இடங்களையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டும். தலைமை விருந்தினர்கள் வருகை தரும் நேரம் மற்றும் புறப்படும் நேரத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
இது மாதிரியான நிகழ்வுகளில் மக்கள் எவ்வளவு பேர் பங்கேற்க முடியும் என்பதை பொதுப்பணித்துறை பொறியாளர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொதுப்பணித்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக் கூட்டம் மற்றும் ரோட் ஷோக்கள் நடத்த சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியை பெற வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
50,000 பேருக்கு மேல் திரள்வார்கள் என்று எதிர்ப்பார்க்க கூடிய கட்சி மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு 30 நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். திடீரென ஏற்பாடு செய்யப்பட கூடிய ஆர்ப்பாட்டம் போராட்டங்களை பொருத்தவரை மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியரும், சென்னைக்கு மாநகர காவல் ஆணையரும் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி, உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்த் விவரங்களை தெரிவிக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு. நிகழ்ச்சியின் போது பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின் அந்த இடத்தை முழுமையாக தூய்மை செய்து தர வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரத்திற்கு நிற்க வைக்காமல், அவர்களுக்கு பாதுகாப்பாக நிகழ்ச்சியில் பங்கேற்க தேவையான அனைத்து வசதிகளையும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தான் செய்ய வேண்டும். நிகழ்ச்சி துவங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
இந்த நெறிமுறைகளை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த வரைவு நெறிமுறைகளின் நகல்களை மனுதாரர் மற்றும் வழக்கில் பங்கேற்ற அதிமுக, தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகியோருக்கு அரசு தரப்பு வழங்க வேண்டும். அவற்றை படித்து பார்த்து உரிய ஆட்சேபனைகளை அந்த கட்சிகள் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கு வரும் 27ம் தேதிக்கு தல்ளிவைக்கப்படுகிறது. அப்போது, இந்த வழக்கில் முடிவு எடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.
