திருவண்ணாமலை, ஜன.7: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில், திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் இரா.அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ- ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை அரசு திரும்பப் பெற வேண்டும். ஊதிய பிடித்தம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை திரும்ப வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் பணி நியமனத்துக்கு வயது உச்சவரம்பு நிர்ணய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். திருவண்ணாலை சிஇஓ அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர்.