×

விஜய் சினிமா டயலாக் ஒருபோதும் நிறைவேறாது திருவண்ணாமலையில் வைகோ பேட்டி

திருவண்ணாமலை, நவ. 21: விஜய் சினிமா டயலாக் ஒருபோதும் நிறைவேறாது என்று திருவண்ணாமலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மதிமுக சார்பில் நடைபெற உள்ள சமத்துவ நடைபயணத்திற்காக இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டரணி நடைபயண தொண்டர்கள் மாவட்டம் தோறும் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, வேலூர் மண்டல அளவிலான நேர்முகத் தேர்வு திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு நடை பயணத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார். அதைத்தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அளித்த பேட்டி: வஞ்சகத்தின் மறுபடிவமாக இருக்கிற ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கிறது. வடமாநிலங்களில் மக்கள் தொகை குறைந்த பகுதிகளில் எல்லாம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள ஒன்றிய அரசு, மதுரை- கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் வஞ்சித்துள்ளது. தமிழர்களை ஏமாற்றுவதற்காக, திருக்குறளையும் பாரதியார் பாடலையும் இரண்டு வரிகள் ஹிந்தியில் எழுதி வைத்துவிட்டு அதனை படித்து நான் தமிழகத்திற்கு வேண்டியவன் என பிரதமர் மோடி வேஷம் போடுகிறார்.

இங்கே ஒருவர் (விஜய்) வேனில் ஏறி நின்று பேசுகிறார். அப்பாவி குழந்தைகளும் பெண்களும் நெரிசலில் சிக்கி இறந்த நிலையில், சென்னைக்கு அப்படியே ஓடிப் போய்விட்டார். இறந்த குடும்பங்களுக்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. இறந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று துக்கம் விசாரிப்பது தான் நம்முடைய வழக்கம். ஆனால், அவர்களை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து துக்கம் விசாரிப்பது என்ன பண்பாடா. தமிழ்நாட்டில் இதுவரை எந்த தலைவரும் இதுபோன்று செய்ததில்லை. இது குற்ற உணர்ச்சி இல்லாத செயல். மேடை ஏறியதும் சினிமா டயலாக் விடுகிறார். மக்கள் தன் பின்னால் வருவதைப் பார்த்து நாம் தான் அடுத்த முதல்வர் என்கிறார். அது ஒருபோதும் நடக்காது’ என்றார்.

Tags : Vijay ,Vaiko ,Tiruvannamalai ,MDMK ,General Secretary ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...