திருவண்ணாமலை, நவ. 21: போளூர் அருகே 6 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. போளூர் அடுத்த பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன்குமார்(40), கூலி தொழிலாளி. இவர், கடந்த 28-1.2016 அன்று மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை மிரட்டி, வீட்டிற்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் குழந்தை அழுதபடியே வீட்டுக்கு திரும்பி வந்தது. அதன் பின் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். அப்போது, சிறுமியின் உடலில் காயம் இருப்பது தெரிய வந்தது. விசாரித்ததில், சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம் தெரிய வந்தது. அதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து போளூர் மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார். அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட குமாரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
