×

தொழிலாளர் நல சட்டங்களை மதிக்காததை கண்டித்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகம் முன் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

நாகை, ஜன. 5: நாகை அருகே தொழிலாளர் நல சட்டங்களை மதிக்காத பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். நாகை அருகே திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் (சிபிசிஎல்) என்ற பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையின் ஒப்பந்த தொழிலாளர்கள் 150க்கும் மேற்பட்டோருக்கு தொடர் பணி வழங்க வேண்டும். தொடர் பணி அளிக்க இயலாதபட்சத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அதன் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி காலத்தை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கியதைபோல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிர்வாகமும் இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் 2018ம் ஆண்டு முதல் போராடியும் இதுவரை ஆலை ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஆலை வளாகம் நுழைவு வாயிலில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், பொது செயலாளர் கண்ணன் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் இதற்கு தீர்வு எட்டாவிட்டால் இன்று (5ம் தேதி) ஆலையில் இருந்து நாகை கலெக்டர் அலுவலகம் வரை குடும்பத்தினருடன் பேரணியாக சென்று வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பது. நாளை (6ம் தேதி) அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் தங்கள் குடும்பத்தினருடன் ஆலை நுழைவு வாயில் முன் அடையாள உண்ணாவிரதம் இருப்பது. வரும் 7ம் தேதி ஆலை நுழைவு வாயில் முன் சுற்றுவட்டார கிராம மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது. வரும் 8ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பதிவு அலுவலகம் எதிரே அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் இணைந்து தொடர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags : Contract workers ,oil refinery premises ,
× RELATED திருப்பதி மாநகராட்சியில் போலி...