அறந்தாங்கி, ஜன. 1: நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புதுக்கோட்டை மாவட்ட கிளையின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் அறந்தாங்கியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாயகன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் துரை பிரபாகர் வரவேற்றார். கூட்டப்பொருள் குறித்து விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் 2020-21க்கான உறுப்பினர் சேர்க்கை நிறைவு செய்தல். வட்டார கிளை தேர்தலை பிப்ரவரி 20ம் தேதிக்குள் நடத்துதல்.
மாவட்டக் கிளை தேர்தலை ஏப்ரல் 30ம் தேதிக்குள் நடத்துதல். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் 17b குறிப்பாணையை ரத்து செய்ய தமிழக அரசை கேட்டுக் கொள்வது. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில கட்டிட நிதி போராட்ட நிதியை அனைத்து வட்டாரங்களும் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், மணமேல்குடி பொருளாளர் சசிகுமார், மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் வீரமணி, துணைச்செயலாளர் இளமாறன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பெரியநாயகம், வீரமணி, வட்டார துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ், அறந்தாங்கி வட்டார செயலாளர் ஐயப்பன், ஆவுடையார்கோயில் வட்டார தலைவர் முருகன், வட்டார செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சரவணன், அனைத்து வட்டார பொறுப்பாளர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.