ஈரோடு, ஜன.1: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் நேற்று 85 சதவீதம் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமைதோறும் மாட்டுச்சந்தை கூடும். இந்த சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வாங்கி செல்வது வழக்கம். நேற்று கூடிய சந்தையில் பசு-450, எருமை-250, கன்று-100 என 800 மாடுகள் வரத்தானது. இதில், பசு மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், கன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டன.
தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம், தேனி, ஓமலூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வாங்கி சென்றனர். இதனால் இந்த வாரம் கூடிய சந்தையில் 85 சதவீதம் மாடுகள் விற்பனையாகின. மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததாக மாட்டு சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.