சென்னை: வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் படிப்படியாக ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்துள்ளது. அதேவேளை, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலாக உருமாறியுள்ளது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடைந்துள்ளது.
இந்த புயலுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மோந்தா (Montha) என பெயரிட்டுள்ளது. தற்போது மோன்தா புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் சென்னைக்கு தென்கிழக்கே 560 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. மேலும், காக்கிநாடாவுக்கு 620 கி.மீ. தெற்கு தென்கிழக்கிலும், விசாகப்பட்டினத்துக்கு 650 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. அந்தமானின் போர்ட் பிளேரில் இருந்து 810 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது.
இது வங்கக்கடலில் மேற்கு-வடமேற்கு நோக்கி தொடர்ந்து நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே வருகிற 28ம் தேதி அதாவது நாளை மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்பட தமிழக துறைமுகங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகம் என மொத்தம் 9 துறைமுகங்களில் கடந்த 25ம் தேதி அன்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில், புயல் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது.
