×

கரூர் சம்பவம் வழக்கை விசாரித்த நீதிபதியை விமர்சனம் செய்த மாஜி அதிகாரி ஜாமீன் கோரி மனு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் செப்டம்பர் 27ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து, காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரதராஜன் என்பவர் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், அக்டோபர் 7ம் தேதி கைது செய்யப்பட்ட வரதராஜன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமீன் கோரி வரதராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகளை எதிர்கொள்வதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு 27ம் தேதி பதிலளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags : Karur ,Chennai ,High Court ,Madras High Court ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...