ஊட்டி, அக். 25: ஊட்டி அவரை விலை கிலோ ரூ.120க்கு விற்பனை ஆவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ், பூண்டு, காலிபிளவர், பீன்ஸ், பட்டாணி மற்றும் ஊட்டி அவரை ஆகியவை அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. இதில், ஊட்டி அவரை சமவெளிப்பகுதிகளில் வாழும் மக்களை காட்டிலும் நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்கள் விரும்பி உண்ணும் ஒரு பொருள். இதனால், இதன் விலை எப்போதுமே உச்சத்தில் இருக்கும்.
குறைந்தபட்சம் கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படும். அதேசமயம், விளைச்சல் அதிகமானால் விலையில் சரிவு ஏற்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் அவரை கிலோ ரூ.100 முதல் 120 வரை தரத்திற்கு ஏற்றவாறு உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கிலோ ஒன்று ரூ.100 முதல் 120 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, பல மாதங்களாக ஊட்டி அவரை விலை குறையாமல் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
