திருவனந்தபுரம்: கடந்த 2011ம் ஆண்டு கொச்சியில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டிலிருந்து 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், தந்தங்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வனத்துறை நடத்திய விசாரணையில், யானை தந்தங்களை வைத்திருப்பதற்காக மோகன்லாலிடம் லைசென்ஸ் எதுவும் இல்லை என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மோகன்லால் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு மோகன்லாலுக்கு தந்தங்களை வைத்திருப்பதற்கான லைசென்சை கேரள அரசு வழங்கியது. இதைத்தொடர்ந்து மோகன்லால் மீதான வழக்கை ரத்து செய்ய அனுமதி கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம், தந்தங்களை வைத்திருப்பதற்காக மோகன்லாலுக்கு கேரள அரசு வழங்கிய லைசென்சை ரத்து செய்து உத்தரவிட்டது. லைசன்ஸ் வழங்கியது குறித்து அரசு இதழில் வெளியிடப்பட வில்லை என்பதால், அதை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
