×

கால்நடைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வைக்கோல் வழங்க வேண்டும்

*கால்நடை வளர்ப்போர் கோரிக்கை

பொன்னமராவதி : தொடர் மழை பெய்துவருவதால் கால்நடைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வைக்கோல் வழங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னமராவதி பகுதியில் நெல்லை விட வைக்கோலுக்கே அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொன்னமராவதி பகுதியில் கடந்த7 ஆண்டுகளாகவே சரிவர மழை பெய்யவில்லை.

இதனால் இப்பகுதியில் நெல் நடவுப்பணி சரி வர நடக்கவில்லை. ஒரு சில விவசாயிகள் மட்டும் போர்வெல் வைத்து மின் மோட்டார் வைத்துள்ளவர்கள் நெல் நடவு செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வளர்க்கும் மாடுகளுக்கு முக்கிய தீவனமாக கருதப்படும் வைக்கோல் கிடைக்கவில்லை. முன்பெல்லாம் இப்பகுதியில் இருந்து வைக்கோல் போர் போராக வெளியூர்களுக்கும் மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும்.

ஆனால் இப்போது இப்பகுதியில் ஒரு சிலர் நெல் நடவு செய்து வைத்திருந்த வைக்கோல் வெளியூர்களில் இருந்து வந்து ஒரு நாட்டு கட்டு வைக்கோல் ரூ.300முதல் 500வரை விற்பனையாகின்றது. ஒரு ஏக்கர் நெல் நடவு செய்து நல்லா மகசூல் கிடைத்தால் சுமார் 20ஆயிரம் முதல் 30வரை நெல் விற்பனையாகும்.இதே இடத்தில் கிடைக்கப்பட்ட வைக்கோல் ரூ.30ஆயிரத்திற்கு மேல் கிடைக்கும் அவ்வாறு இப்பகுதியில் வைக்கோலின் விலை மிகப்பெரிய அளவிற்கு சென்று விட்டது. இதனால் இப்பகுதியில் நெல் நடவு செய்த விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கின்றது. என்று சந்தோசப்பட்டாலும் மழையினை நம்பி எந்த விவசாயிகளும் நெல்நடவு செய்யாத நிலையினால் அதிக அளவிலான விவசாயிகள் அதிக விலைகொடுத்தே வைக்கோல் வாங்க வேண்டிய நிலையுள்ளது.

இப்போது பொன்னமராவதி பகுதியில் மாடுவளர்ப்போர் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வைக்கோலை அதிக விலைகொடுத்து வாங்கவேண்டிய நிலையுள்ளது. எனவே தொடர் மழை பெய்து வருவதால் முன்பு கொடுத்தது போல அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை மருத்துவமனைகளில் மானிய விலையில் வைக்ககோல் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ponnamaravathi ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...