சென்னை: வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கி உள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்துள்ளதாலும் அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தற்போது 17% ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை தளர்வு செய்து 22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கோரி கடந்த 19ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலனை செய்து நெல் தரத்தை மதிப்பீடு மற்றும் ஆய்வு செய்வதற்காக மூன்று குழுக்களை நியமித்துள்ளது. நெல் தரத்தை மதிப்பீடு செய்வதற்காக ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் 3 துணை இயக்குநர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
