×

கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க வடமாநில ஏடிஜிபிக்கள் 2 பேர் நியமனம்: இதுவரை எந்த பெரிய வழக்குகளையும் விசாரிக்காதவர்கள் என்பதால் சர்ச்சை

சென்னை: கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணையை கண்காணிக்க வடமாநிலத்தைச் சேர்ந்த 2 ஏடிஜிபிக்களை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் இருவருமே எந்த ஒரு பெரிய வழக்கையும் விசாரிக்காதவர்கள் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய், தவெக கட்சியைத் தொடங்கி மண்டல மாநாடுகளை நடத்தினார். இந்த மாநாட்டுக்கு வந்த பல ரசிகர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். பலர் தண்ணீர், சாப்பாடு இல்லாமல் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

ஆனால் மாநாடுகளில் மொத்தமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஒன்றிரண்டு பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில்தான் மக்கள் சந்திப்பை தொடங்கப்போவதாக அறிவித்தார். அதன்படி மாவட்டத்தில் ஒரு இடத்தில் பஸ்சில் சென்று பிரசாரம் செய்து வந்தார். அதன்படி கடந்த மாதம் 27ம் தேதி நாமக்கல், கரூர் சென்றார். நாமக்கல் பிரசாரத்தின்போதே கூட்டம் முன்டியடித்தது. அதில் பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து கரூர் வந்தபோது நடிகர் விஜய்யை பார்க்க கூட்டம் முன்டியடித்ததில் 41 பேர் உயிரிழந்தனர். 180 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில் கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டச் செயலாளர் ஆம்புலன்சை தடுத்ததாக கைது செய்யப்பட்டார். மேலும், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகி நிர்மல்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றம், கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டது.

ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான தனிப்படையினர் உடனடியாக சம்பவ இடம் சென்று தீவிர விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர் மதியழகனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதேநேரத்தில், தமிழக அரசு ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. அவரும் உடனடியாக விசாரணையை தொடங்கினார். இந்தநிலையில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தவெகவும், சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் கண்காணிக்கவும், இதற்கு உதவ தமிழகத்தைச் சேராத 2 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரிகளான சுமீத் சரண், சோனல் வி.மிஸ்ரா ஆகியோரை மேற்பார்வையிடும் அதிகாரிகளாக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றும் ஏடிஜிபி சுமீத் சரண் நியமிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 1997ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். இவர், கோவை மாநகர கமிஷனராக பணியாற்றியுள்ளார். பின்னர் ஒன்றிய அரசு பணிக்குச் சென்றவர், தற்போது எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சோனல் வி.மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2000ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். இவர் தற்போது ஒன்றிய ரிசர்வ் போலீஸ்(சிஆர்பிஎப்) ஏடிஜிபியாக உள்ளார். இவர்கள் இருவரையும் மேற்பார்வையாளராக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதில் சுமீத்சரண், நெல்லையில் டிஐஜியாக பணியாற்றியபோது அவரது மனைவி, போலீஸ் கேன்டீனில் பொருட்கள் வாங்கியதற்கு பணம் தராமல் தான் டிஐஜியின் மனைவி என்று கூறிவிட்டு வந்து விட்டார். இது பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, கடந்த அதிமுக ஆட்சியில் அப்போது அமைச்சராக இருந்த வேலுமணி ஆதரவுடன் கோவை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அமைச்சருடன் சேர்ந்து கொண்டு செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமைச்சர் யாரை கை காட்டுகிறாரோ அவருக்குத்தான் பதவி என்று சுமீத் சரண் செயல்பட்டு வந்தார்.

தேர்தல் நேரத்தில் அவர் மீது திமுக புகார் கூறியதால் தேர்தல் ஆணையம் அவரை மாற்றியது. தற்போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவை கமிஷனராக நியமிக்கப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, குற்ற ஆவணக்காப்பக ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். 2022 ஜனவரி 4ம் தேதி ஒன்றிய அரசுப் பணிக்கு சென்றார். அங்கு எல்லை பாதுகாப்பு படையில் டெல்லியில் பணியாற்றி வருகிறார். அதேபோல, சிஆர்பிஎப் ஏடிஜிபியாக உள்ள சோனல் வி.மிஸ்ரா, தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கு பணியில் பணியாற்றாதவர்.

எந்த வழக்கையும் விசாரிக்காதவர். இவர் 2018ம் ஆண்டு ஒன்றிய அரசுப் பணிக்குச் சென்று விட்டார். கடந்த 7 ஆண்டுகளாக அவர் ஒன்றிய அரசுப் பணியிலேயே உள்ளார். இதனால் வழக்கு விசாரணை குறித்த எந்த அனுபவமும் அவருக்கு இல்லை. இருவருமே சட்டம் ஒழுங்கு பணியில் சிறப்பு சேர்க்காதவர்கள். இவர்கள் இருவருமே ஒன்றிய அரசு என்ன சொல்கிறதோ அப்படியே செய்யக்கூடியவர்கள். இதனால் இவர்கள் இருவரது நியமனம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Karur Vijay stampede ,Chennai ,Supreme Court ,CBI ,
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...