தூத்துக்குடி, டிச. 28: தூத்துக்குடி மையவாடியை ஸ்டெம் பார்க்காக மாற்றக்கூடாது என கீதாஜீவன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர், தமிழக தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான ஹவுசிங் போர்டுக்கு வடபுறம் சுந்தரவேல்புரம் சுடுகாட்டுக்கு தென்புற பகுதியில் சுமார் 12 ஏக்கர் ஆங்கிலேயர் காலத்தில் 1903ம் ஆண்டு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டது. சுந்தரவேல்புரம், ஸ்டேட் பாங்க் காலனி, ஹவுசிங் போர்டு காலனி, கிருஷ்ணராஜபுரம், நந்தகோபாலபுரம், அழகேசபுரம், செல்வவிநாயகபுரம், அம்பேத்கர் காலனி பகுதிகளைச் சார்ந்த அனைத்து சாதி, மதத்தைச் சேர்ந்த மக்களும் இறந்தவர்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
1985ம் ஆண்டு வரை தகர கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒதுக்கப்பட்ட இடத்தை குறிக்க கல்தூண் ஊன்றப்பட்டது இன்று வரை உள்ளது. கல்லறைகள் ஒவ்வொரு குடும்பத்தாரின் நினைவுச் சின்னமாகும். தற்போது Stem Park அமைப்பதற்காக மாநகராட்சி திட்டமிட்டு வேலை தொடங்க உள்ளது. இதற்காக கல்லறைகளை அகற்றுவதற்கு மாநராட்சி முயற்சி செய்து வருகிறது. தூத்துக்குடி மாநகரம் வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகும். பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உடல் தகனம் செய்யும் இடம் அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே இருக்கின்ற இடங்களை பாதுகாத்திடும் வகையில் ஸ்டெம் பார்க் திட்டத்தை கைவிட்டு மேற்படி இடத்தை பொது மையவாடியாக தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.