×

கடம்பூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்சில் மலைகிராம பெண்ணுக்கு பிரசவம்

சத்தியமங்கலம்,டிச.27:சத்தியமங்கலம் அருகே மலை கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் மலைகிராம பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி மாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா, கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமுதா (24). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டதால், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் மாக்கம்பாளையம் கிராமத்திற்கு சென்று அமுதாவை அழைத்துக் கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆம்புலன்சை கோகுல கிருஷ்ணன் ஓட்டிச் செல்ல மருத்துவ உதவியாளர் தேவராஜ் உடனிருந்தார்.
அடர்ந்த வனப்பகுதியில் அமுதா பிரசவ வலி தாங்க முடியாமல் துடித்ததால், வாகனத்தை நிறுத்திவிட்டு மருத்துவ உதவியாளர் தேவராஜ் அமுதாவிற்கு பிரசவம் பார்த்தார்.

அப்போது ஒரு ஆண், ஒரு பெண் என அழகான இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதையடுத்து தாய் மற்றும் சேய்களை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதிக்கப்பட்டு மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடர்ந்த வனப்பகுதியில் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு இரட்டை குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறந்த தகவல் அறிந்த மலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : hill village woman ,hills ,Kadampur ,
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு