ஈரோடு, டிச.27: தேசிய இளைஞர் விழாவையொட்டி மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள் மெய்நிகர் முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் இளைஞர்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை தேசிய இளைஞர் விழாவாக கொண்டாடி வருகிறது.இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, இவ்விழாவினை மெய்நிகர் முறையில் நடத்துவது என முடிவு செய்துள்ளது.
ஈரோடு மாவட்ட அளவிலான இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலைகள், எழுத்தாற்றல் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளது.போட்டிகள் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. 15 வயது முதல் 29 வயதிற்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர் அல்லாதவர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.