சோமனூர்,டிச.26: சோமனூர் பகுதியில் உயர்மின் கோபுரங்கள் அமைத்ததற்கு முறையான இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மாவட்டம் அரசூர் துணை மின் நிலையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் ஈங்கூர் துணை மின் நிலையத்திற்கு கருமத்தம்பட்டி, எலச்சிபாளையம், செம்மாண்டம்பாளையம், திருப்பூர் மாவட்டம் வழியாக உயர் அழுத்த மின்கோபுரம் கடந்த 5 ஆண்டுகளாக அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கப்பட்ட இடத்தில் உள்ள விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்காததை கண்டித்து சோமனூர் அடுத்த எலச்சிபாளையம் பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏர்முனை இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் சதிஷ்குமார், பொன்னுச்சாமி, பெருமாநல்லூர் முத்து மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், மின்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்த இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும், டிரான்டிரேன்ஸ்கோ நிறுவனம், விவசாயிகளிடம் எந்த அறிவிப்பும் செய்யாமல், தன்னிச்சையாக செயல்படுவதாகவும், பவர்கிரிட் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியதை போல, இந்த மின்கோபுரத்தின் சுற்றளவில் 35 மீட்டர் அளவுக்கு இழப்பீடு வழங்க கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.